Saturday, August 12, 2023

இதிகாசங்கள் கட்டுக்கதைகளா ?

இதிகாசங்கள் !

அவை உண்மையில் நடந்த கதைகளா ? கட்டுக்கதைகளா ? எனப்பல்வேறு தர்க்கங்கள் பல்வேறு நிலைகளில் பல்வேறு அறிஞர்களுக்கிடையில் நிகழ்ந்தவண்ணம் தானிருக்கின்றன. அவ்வடிப்படையில் ஆத்திகத்துக்கும், நாத்திகத்துக்கும் இடையில் கூட இவ்விதிகாசங்கள் இழுபட்டுக் கொண்டுதானிருக்கின்றன.

உண்மையிலேயே இதை அவரவர் பார்க்கும் கோணங்களில் தான் அதனைப் பற்றிய புரிதல்களும் அடங்கியிருக்கின்றது என்பதே உண்மை. 

இவ்விதிகாசங்களில் புதைந்துள்ள அறிவினைப் பலப்படுத்தும் சில நிகழ்சுகளை மதமுலாம் பூசாது எடுத்துப் பார்க்கத் தலைப்படும்போது அவை ஆக்கப்பட்டதற்கான ஏமது முன்னோர்களின் நோக்கத்தின் தாக்கம் புரிகிறது. 

குறிப்பாக மகாபாரதத்தை எடுத்துக் கொண்டால் அதன் பாத்திரப் படைப்புகள் அப்படைப்புகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் தன்மையின் அழுத்தங்கள் வாழ்வின் பல நிலைகளைச் சமாளிப்பத|ற்கான வழிவகைகளை நமக்குத் தருவது போலிருக்கும்.
          
மகாபாரதத்திலேயே என்னுள்ளத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய பாத்திரம் கர்ணன் எனும் பாத்திரப் படைப்பே. 

இப்பாத்திரப்படைப்பின் பின்னே பல வாழ்வின் சூட்சுமங்கள், மனிதராகப் பிறப்பெடுத்தோர் செய்யக்கூடாத பேதப்பிரிவுகள் எனப்பல்வேறு படிப்பினைகளை எம்முள் புகுத்தி விடுகின்றது. 

எமக்கு வாழ்வின் பல நடப்புமுறைகளை விளக்குவதற்காகவே ஆங்காங்கு பல கிளைக்கதைகள் புகுத்தப்பட்டுள்ளன. 

இவற்றில் கர்ணன்னைப் பற்றிய  நிகழ்வொன்று .. 
         
முதியவர் ஒருவர் நடந்து செல்கிறார். நண்பகல் பொழுது.. களைப்பால் தொடர்ந்து நடக்க முடியாத நிலை. எதிரே துரியோதனன் வருகிறான். முதியவர் துரியோதனனிடம் தனக்கு உண்ண ஏதாவது தர கேட்கிறார். உணர்வு விடுபட்ட நிலை முதியவர்க்கு. துரியோதணன் அவரிடம் அருகில் இருந்த உணவு விடுதியை சுட்டிக்காட்டி வயிறார உணவுண்டு செல்ல சொல்கிறான். 

ஆனால் முதியவர்க்கோ எழுந்து நடக்க முடியாத நிலை..

துரியோதனன் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஒரு ரதம் வருகிறது. முதியவர் தன் சக்தி அனைத்தும் திரட்டி தன் நிலையை உணர்த்த முற்படுகிறார். 

கீழே இறங்கிய அந்த மனிதன் முதியவரின் நிலையை நன்கு அறிகிறான். தன் ரதம் தனில் தொங்கிய சில கனிகளை முதியவர்க்கு புகட்டுகிறான். சில இளநீர் குலைகள் அலங்காரமாக ரதமோடு வருகின்றன. அவற்றையும் எடுத்து புகட்டுகிறான். முதிய மனிதர் களைப்பு விடை பெற்றவராய் நீங்கள் கர்ணன் தானே என வினவுகிறார். 

தற்போது முன் சென்ற பாவி உணவிடும் இடத்தை சுட்டிசென்றதாய் வருந்துகிறார் . கர்ணன் தலை அசைத்த படியே நீங்கள் மெதுவாக உணவு விடுதிக்கு சென்று உணவருந்தி செல்லுங்கள் என கூறுகிறான். முதியவர் தன் களைப்பு நீங்கியதை சொல்லி பயணத்தை தொடர்கிறார்..
        
கர்ணன் தேரோட்டி மகன் என்று அவமதிக்கப்பட்ட பொழுது அவனைத் தன் கீழுள்ள சிற்றூர் ஒன்றுக்கு அரசனாக்கி அவனது அவமானத்தைப் போக்கியவன் துரியோதனன். 

தனக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைத்த துரியோதனனுக்கு தீராத நன்றிக்கடன் பட்டுள்ளான் கர்ணன்.

இருவருக்குமிடையில் இணக்கம் மிகுந்த நட்புப்பாலம். ஆனால் ஒருவனின் தன்மையோ முதியவரின் இக்கட்டை புரிந்துகொள்ள எத்தனிக்காத சுயநலம், மற்றவனின் தன்மையோ தன்னிடம் இருப்பதைக் கொண்டு அம்முதியவரை வயிறுநிறையச் செய்யும் கருணை உள்ளம். இப்படி இருக்கும் இருவர் நண்பர்களாக இருக்க முடியுமா?

அப்படியான உண்மை நிலையை நாம் வாழ்வில் காணும்போது இப்படியான நிகழ்வுகளின் தாத்பரியத்தை விளக்கவே நம் முன்னோர்களின் இதிகாசப் படைப்பு எனும் எண்ணம் உள்ளத்துக்கு ஒருவகை விளக்கத்தைத் தருகிறது.
        
இதிகாசங்களை நோக்கிய எனது பார்வையை மூன்று காலகட்டங்களூடாக நான் பார்க்கிறேன். 

பாடசாலை நாட்களில் பாட அங்கமாகப் படிக்கும் போது. அது என்மீது கட்டாயமாகத் திணிக்கப்பட்ட காலம் . 

விரும்பியோ, விரும்பாமலோ இதிகாசங்களைப் படிக்க வேண்டியது அப்போதைய காலக்கட்டாயமானது. 

அடுத்து எனது வாலிப்பைக் காலம்.

எதையும் கேள்வி கேட்க வேண்டும் எனது இளமையில் எழும் வேகத்துடிப்பு. பாரம்பரியக் கலாச்சாரத் தழுவல்களை எதிர்ப்பது புரட்சிகரமான் செயல் எனும் குறைப்புரிதல், அந்த வயதுக்கேற்ற சமுதாயவரம்புகளுக்கெதிரான கிளர்ச்சி என்தின் ஒரு அங்கமாக இதிகாசப் பரிகாசம் என்பன. 

அதைத்தொடர்ந்த இளவயது இல்லற வாழ்க்கையின் போது கொண்ட அரசியல் கோட்பாடுகளின் நாகரீகம் நாத்திகம் பேசுதல் எனும் விளக்கமற்ற ஒரு தன்மை. , அடுத்து வாழ்க்கையில் அடிவிழ, அடிவிழ விழுந்து , விழுந்து எழும்போது அக்காயங்களின் வலி கொடுத்த ஒரு புரிதல். 

இந்த இதிகாசங்களுள் ஏதாவது புதைந்திருக்குமோ எனும் ஒருவகையான உண்மையான தேடலைக் கொடுத்ததின் காரணம் மதமுலாமைத் தவிர்த்த வாழ்வின் உண்மைகள் எனும் ஒருவகை புரிதல்.
      
இன்றைய நான் நாத்திகனல்ல,

முழுமையான கலாச்சாரத்தில் மூழ்கிய ஆத்திகனுமல்ல. 

ஆனால் எனக்கும் மேலே ஒரு சக்தி உண்டு அதுவே எண்ணிப்பார்க்க முடியாத வகையில் எதிர்பாராத வேளையில், எதிர்பார்க்காத நிகழ்வுகளை எம்மீது திணிக்கிறது எனும் விளக்கம் அல்லலுறும் வேளையில் மனதை இலேசாக வருடிக் கொடுக்கிறது. 

அந்தச் சக்திக்கு ஒரு பெயர் கொடுத்து அது அடுத்தவருக்கு எவ்வகையிலும் இடையூறு விளையாத வகையில் வணங்குவது தான் ஆத்திகம் என்றால் நான்கூட ஆத்திகனே !
     
இதிகாசங்கள் இதயத்தில் ஏற்படுத்திய ஏற்ற இறக்கங்களை இலேசாக உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

மீண்டும் வருவேன்
சக்தி சக்திதாசன்

0 Comments:

Post a Comment

<< Home