Friday, August 18, 2023

வந்தது தெரியும் ! போவது எங்கே ?

"வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது" இது கவியரசரின் பாடல் வரிகள். இதிலே அடங்கியிருக்கும் அர்த்தங்கள் தான் பல்வேறு. 

எந்தக் கோணத்தில் நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தே இதன் அர்த்தமும் திரிபு படுகிறது. 

கருவானதிலிருந்து உலகில் உருவாவதுவரை ஒரு பத்துமாதம் என்பது இயற்கை எனும் இறை வகுத்து வைத்த நியதி. 

அதே உருவானகாலம் முதல்  நீறாகும் வரை எத்தனை காலம் என்பதை அதே இயற்கை எமக்குப் புலப்படாத வகையில் புதிராக காலம் எனும் சேற்றினுள் புதைத்து வைத்திருக்கிறது என்பதுவே உண்மை.

மற்றொரு கோணத்தில் பார்த்தால் பிறந்து குழந்தையாகி வாழ்க்கையில் எத்தகைய ஒரு பிரஜையாக உருவாகப் போகிறோம் என்பது கூட "போவது எங்கே?” எனும் கேள்வியில் அடங்கலாமல்லவா ?

இறுதியாக எமது போகும் இடம் அல்லது போகும் நிலை என்ன என்பது எம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. 

அதனைப் பற்றிய ஆன்மீக விளக்கம் இதுவல்ல. 

ஆனால் எத்தகைய ஒரு வாழ்வினினை நாம் எமக்கு வகுத்து வைத்திருக்கிறோம் என்பதைச் சிந்திப்பது எம் அனைவராலும் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு செயலே !

உள்ளத்தில் தோன்றும் உணர்வலைகள் ஏற்படுத்தும் தாக்கங்கள் வாழ்வில் நாம் எடுக்கும் பல முடிவுகளுக்குக் காரணமாகின்றன. 

அந்த உணர்வலைகளை எமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது ஒன்றே எமது முடிவுகளை தெளிவான முடிவுகளாக்கும் வல்லமை கொண்டது. 

நாம் செய்யும் நன்மைகள், அடுத்தவரை நோக்கிய எமது மனிதாபிமானமிக்க உணர்வுகள் எம்மை வாழ்வில் சரியான வழையில் நடைபோட உதவுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. 

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் நற்பண்புகளும், தீய பண்புகளும் உறைந்து கிடக்கின்றன. நற்பண்புகளை வளர்ப்பதும், தீய பண்புகளை அழிப்பதும் எமது வாழ்வின் தார்மீகப் பண்புகளாகின்றன.

பல சமயங்களில் நல்லதொரு செயலை நாம் புரியும் போது எமைச்சுற்றி எமை உபயோகித்து தம்மை நியாயப்படுத்த எண்னும் பலரால் எமையறியாமலே நாம் உபயோகிக்கப்பட்டு விடுகிறோம். 

நாம் மற்றவர்களின் பார்வையில் தவறிழைத்தவர்களாகச் சித்தரிக்கப்படுகிறோம். அத்தச் சிறு தளர்வுக்காக நாம் மனம் வருந்தி விடக்கூடாது. 

நாம் செல்லும் பாதையில் இருந்து வழுகி விடக்கூடாது. அதுதான் வாழ்க்கை எம்மீது வீசும் சோதனை. 

இது எனது வாழ்க்கையில் நான் அனுபவித்து அறிந்து கொண்ட உண்மை. 

எனை உபயோகித்து தாம் தமது இலக்கை அடைந்து விட்டோம் என்று எண்ணி எனைத் தூக்கி வீசியவர்கள் பலர், அதேநேரம் எனத் தமது உண்மையான துணையாக எண்ணி என்மீது பாசம் பாராட்டுவோர்கள் அதைவிடப் பன்மடங்கு அதிகம். 

உலகம் நல்வர்களாலும், தீயவர்கலாளும் ஆனது அதுதான் யதார்த்தம். 

எப்போது நாம் காணும் காட்சிகளில் இருக்கும் நன்மைகளை மட்டும் வடித்தெடுத்து பார்க்கப் பழகுகிறோமோ அப்போதுதான் வாழ்வின் சூட்சுமத்தை அறிந்தவர்களாக்கிறோம்.

எங்கே போகப் போகிறோம் என்பதைத் தீர்மானித்த பின்பு அவ்விடத்தை அடையும் வழிகளை ஆராய்ந்தால் பலவழிகள் தென்படும். 

அவற்றில் சில நேர்வழியாகவும், மற்றும் சில குறுக்கு வழிகளாகவும் இருக்கும். அவ்வழிகளில் எதை நாம் தேர்ந்தெடுக்கிறோம் என்பது எமது மனதின் தார்மீக அடிப்படையில். தங்கியுள்ளது.

எங்கே , எப்போது எப்படி எமது வாழ்வின் வழிகளை தேர்ந்தெடுத்தாலும் பல சமயங்களில் பாதையில் குறுக்கிடும் இடர்கள் எமை பலவிடங்களில் பின் தங்க வைத்துவிடும். 

அப்பின்னடைவுகள் எமது மனதின் அடிப்படையையே உலுக்கிவிடும் வல்லமை படைத்தவை. 

அப்படியான தருணங்களில் அவ்விடர்களில் எம்மை மேலும் உறுதியாக்க இயற்கை எமக்களிக்கும் ஆயுதங்கள் என்று எடுத்துக் கொண்டால் அவற்றை எமது இலக்கை நோக்கிப் பயணிக்க உதவும் படிக்கற்கள் என்று நாம் ஏற்றுக்கொள்ளலாம்.

நினைப்பது அனைத்தும் நடப்பது அல்ல , நடப்பவை எல்லாம் நாம் நினைத்தவையும் அல்ல.

ஏதோ அனைத்தும் எமது கையில் என்று எண்ணிக் கொண்டு நாம் வாழ்கிறோம் ஆனால் பல திருப்பங்கள் காலத்தால் எம்மீது தினிக்கப்பட்டு எமது பாதை நாம் போக விரும்பிய பாதையை விட்டு விலகிச் செல்கிறது. 

ஆனால் அம்மாற்றங்களை காலத்தின் கட்டாயம் என்றுணர்ந்து எதிர்க்காமல் ஏற்றுக் கொள்ளப்பழகிக் கொண்டால் வாழ்க்கையின் நிகழ்வுகள் இலகுவாகின்றது.

இதையேதான் " போவது எங்கே ? “ எனும் கவியரசரின் பாடல் வரிகள் எம்மை வினவுகின்றன என்று எடுத்துக் கொள்ளலாம். 

வாழ்வின் தபோவனப் பகுதியில் வாழ்வோருக்கு இதே " போவது எங்கே ? “ எனும் வரிகள் வித்தியாசமான விளக்கத்தைத் தரலாம் ஆனால் வாழ்வின் ஆரம்ப கட்டத்திலோ அன்றி இல்லறப்பகுதியிலோ இருப்போர் இவ்வரிகளின் அர்த்தத்தை தமது வாழ்வின் குறிக்கோளுக்கு ஒரு வழிகாட்டியாகக் கொள்ளலாம்.

மீண்டும் வரும்வரை
அன்புடன்
சக்தி சக்திதாசன்

0 Comments:

Post a Comment

<< Home