துணிவுகள் பலவிதமோ ?
உள்ளத்தின் ஆழத்தில் உணர்வுகள் தொடுத்திடும் போரின் புழுதிகளாய் எண்ணங்கள் மேலெழுந்து தவழ்கிந்றன.
எதையும் தாங்கும் இதயம் ஏனோ இதையும் தாங்க வேண்டுமா ? எனத் துவண்டு போகிறது.
ஆமாம் வாழ்க்கை எனும் களத்தினில் ஏந்திய விழுப்புண்களின் வடுக்கள் மாறி,மாறி விடையிலா வினாக்களை தொடுத்த வண்ணம் . . . .
என்னுடைய சக்தியின் விரல்களில் இருந்து விளங்க முடியா வியாக்கினங்கள் விழுந்த வண்ணம் இருக்கிறதே என்று நீங்கள் எண்ணுவது சகஜமே !
தத்துவங்கள் எப்போதும் காயமடைந்த இதயங்களுக்குக் களிம்பு தடவுவதைப் போலாகும்.
எப்போதும் , எங்கும் , எல்லோருக்கும் நன்மையையே எண்ணுவோருக்கு தொடர்ந்து இன்னல்கள் விளைப்போரின் செய்கைகள் மனதை வருத்தத்தான் செய்கிறது.
அதற்காக நாம் போகும் பாதையையும், நாம் கொண்டிருக்கும் கொள்கைகளையும் கைவிட்டு விடுமா ?
இல்லையே !
கேள்விகள் ஆயிரம்.
அவையனைத்துக்கும் விடைகள் உடனடியாக முளைத்து விடுகின்றனவா ?
துணிவே துணை என்கிறோம் !
துணிந்து நில் ! தொடர்ந்து செல் ! என்கிறோம்.
எம்மில் எத்தனை பேர் துணிவு என்பதனைச் சரியாக விளங்கிக் கொள்கிறோம்.
மேல்மாடியில் இருந்து கட்டாந்தரையில் குதிப்பதை துணிவு என்பான் ஒருவன்.
பறந்து கொண்டிருக்கும் விமானத்தில் இருந்து பாரசூட்டில் குதிப்பதைத் துணிச்சல் என்பான் ஒருவன்.
மூடத்தனத்தைக் கூட மறைப்பதற்கு துணிச்சல் காரணமாக இருக்கிறது.
காரணிகளைச் சரியாக விளங்கிக் கொண்டு நாம் எடுக்கும் நடவடிக்கைகளின் தாக்கங்களை புரிந்து செயற்படுவதும் கூட துணிவாகவே கணிக்கப் படுகிறது.
எம்மால் எதிர்கொள்ள முடியாது என்பதைப் புரிந்து ஒதுங்கிக் கொள்வது கூட ஒருவகை துணிச்சலே !
எம்முன்னே எதிர்ப்படும் சவால்களின் தரத்தைப் புரிந்து கொண்டு அதனைக் கையாள்வதற்கு தேவையான யுக்திகளோடு அவற்றை எதிர்கொள்வது கூட துணிச்சலே !
மகாபாரதத்திலே ஒரு காட்சி ,
தருமரை அரசராக்கினால் துரியோதனன் வெகுண்டெழுவான் என்பதினால் பாண்டவர்களுக்கு வளம் எதுவுமற்ற காண்டவபிரதஸ்தத்திற்கு அதிபர்களாக்கி அனுப்ப முனைகிறான் திருதராஸ்டிரன்.
நீதிநெறி வழுவாமல் மன்னனுக்கு மதிகூறும் மகாமந்திரி விதுரர் நீதி மிக்க பாண்டவர்கள் பக்கம் என்பதைச் சகுனியும், துரிதோதனனும் அறிவார்கள்.
விதுரரை அவமதிக்கும் பொருட்டு அவர்கள் அவரையும் பாண்டவர்களோடு வெளியேறச் சொல்கிறார்கள்.
அப்போது விதுரர் தன் மனசாட்சியோடு போராடுகிறார்.
எப்போதும் நீதி வழுவாமல் நடக்கும் பாண்டவரை விட பாசத்துக்கு முதலிடம் கொடுத்து நீதியை வழுவவிடும் திருதராஸ்டிரனுக்கே தனது மதியுகம் தேவைப்படும் என்று முடிவெடுக்கிறார்.
நாட்டு நன்மையைக் கருத்தில் கொண்டு தனக்கு அவமரியாதையைப் பரிசாகக் கொடுக்கும் கெளரவர்களுடன் தங்கி விடுகிறார் விதுரர்.
நிஜமாக நடந்ததோ இல்லையோ என்பதிங்கே கேள்வியில்லை.
சரியான ஒரு முடிவை தெளிந்த மனதுடன் எடுக்கத் தேவையான துணிவைப் பற்றி எமக்குப் புரிய முன்னோர்கள் புதைத்து வைத்த கருத்தே இங்கு கவனிக்கப் பட வேண்டியது.
வாழ்க்கை ஒரு அனுபவப் பட்டறை. அங்கு அடி வாங்கி, வாங்கித்தான் அனுபவங்களைச் சேகரிக்க வேண்டியுள்ளது.
அவசரம் அவசரமாக பரபரப்புடன் அல்கல் படும் பலரின் நடுவே அமைதியாக மெளனமாக நிற்பான் ஒருவன்.
அவனைப் புரிந்து கொள்வது கடினம்.
அவனைப் புரிந்து கொள்ளும் மனதை அடைந்து விட்டால் பேரானந்தமே !
மீண்டும் பேசும் வரை
சக்தி சக்திதாசன்


0 Comments:
Post a Comment
<< Home