Saturday, August 19, 2023

கீறல்களின் கூறல்கள்

இதயத்தின் ஓரங்களிலெல்லாம் சின்னச் சின்ன புதையல்களாக சின்னச் சின்ன நிகழ்வுகள் கொடுத்த அனுபவங்கள் பாடங்களாகச் சேகரிக்கப்பட்டு வைக்கப்ப்ட்டிருக்கின்றன,

அச்சிறு புதையல்களை சில சமயங்களில் திறந்து பார்க்கிறோம் சில இன்ப உணர்வுகளினால் தாலாட்டுகின்றன, சில ரணங்களைத் தடவும் போது இன்று கூட வலிக்கத்தான் செய்கிறது.

ஆனால் அதற்காக அவைகளை மட்டும் மறந்து புதைத்து விட முடிகிறதா ? இல்லையே !

அப்படியான ஒரு நினைவை அன்பு உள்ளங்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது மன்ம் கொஞ்சம் இலேசாகிறது, 

அத்தோடு படிக்கும் சில இளம் நெஞ்சங்கள் இவற்றிலிருந்து எதையாவது தமக்கு உபயோகமாக எடுத்துக் கொள்வார்களோ ? எனும் ஒரு நப்பாசையும் கூட.

அப்போது நான் லண்டனுக்கு வந்து ஒரு இரண்டு அல்லது மூன்று வருடங்கள் இருக்கும் வயது ஒரு 22 இருக்கலாம்.

இலண்டனில் இரண்டு மூன்று வருடங்கள் வாழ்ந்தும் கூட வாழ்வின் வளைவு நெளிவுகளை அறிந்து கொள்ளாத ஒரு  வாலிபப் பருவம். 

அதற்காக எல்லோரும் அப்படித்தான் இருந்தார்கள் என்று சொல்ல மாட்டேன். 

நான் வளர்ந்த சூழல் அப்படி. நான் எதையும் ஆழாமாகப் பார்க்கும் தன்மையை வளர்த்துக் கொள்ளவில்லை. 

பெற்றோர் எனும் போர்வையால் போர்க்கப்பட்டு சமுதாய வளைவு, நெளிவுகளைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை தவற விட்டவன் என்றே நினைக்கிறேன்.

எனக்கு ஈழத்திலே இருந்த நண்பர்களில் நெருங்கிய நண்பன் ஒருவன் இங்கிலாந்து வருவதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டு இருந்தான். 

அப்போது இலண்டனிலே மாணவனாக உயர் கல்வி கற்றுக் கொண்டிருந்த என்னிடம்  ஒரு கல்லூரி அனுமதி பற்றி விசாரிக்கச் சொல்லியிருந்தான்.

நானும் விசாரித்து அதைப்பற்றிய தகவல்களை அவனுக்கு அனுப்பினேன். 

அவனும் அக்கல்லூரியில் தனக்கு அனுமதியை வாங்கிக் கொண்டான். அனுமதிக்கான வருடக் கட்டணத்தை கட்டும்படி என்னிடம் பணத்தை அனுப்பினான். 

இரவுகளில் இரவுக் காவலனாக வேலை, பகலில் கல்லூரி என பரபரப்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தேன்.

அக்கல்லூரிக்கு விஜயம் செய்து நேரிடையாகப் பணத்தைக் கட்ட எனக்கு நேரம் ,கிடைக்கவில்லை. 

இரண்டு மூன்று நண்பர்களைக் கேட்டேன். அவர்களோ என்னால் கிடைக்கும் பயன்களை அனுபவிக்கக் காத்திருந்தார்களே ஒழிய எனக்காக உதவ முன்வரவில்லை. 

அதுமட்டுமல்ல அவர்களும் என்னைப் போல வேலை , கல்லூரி என பரபரப்பாகத்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

வேறுவழியில்லையாதலால் அக்கல்லூரிக்கு போன் செய்தேன். வங்கியில் இருந்து  ட்ராப்ட் எடுத்து அனுப்பும் படி அறிவுறுத்தினார்கள்.

கல்லூரிக் கட்டணம் கட்ட வேண்டிய இறுதிநாள் நெருங்கிக் கொண்டிருந்தது. அவசரமாக நான் வசிக்கும் நகரத்திலுள்ள ஒரு பிரபல வங்கியை அணுகி அவர்களிடம் ட்ராப்ட் எடுக்கும் முறையைக் கேட்டு பணத்தைச் செலுத்தி அக் கல்லூரியின் பெயருக்கு ட்ராப்ட் வாங்கி அனுப்பினேன்.

இரண்டே இரண்டு முக்கியமான விடயங்களை மறந்து விட்டேனா, அல்லது எனது பொறுப்பற்ற தன்மையால் அசாதரணமாக விட்டு விட்டேனா?இன்றும் எனக்கு விடை தெரியவில்லை.

ஆமாம் அந்த ட்ராப்டை நகலெடுக்கவோ அன்றி அக்கடிதத்தைப் பதிவுத் தபாலில் அனுப்பவோ தவறி விட்டேன். 

எனது போதாத காலம் அக்கல்லூரி தமக்கு அக்கடிதம் கிடைக்கவில்லை என்று கூறிவிட்டார்கள்.

அவசரமாக அந்த ட்ராப்ட் எடுத்த வங்கிக்கு ஓடினேன், அவர்களோ அந்த வங்கியில் எனக்கு கணக்கு இல்லாததால் எனக்கு எந்த வங்கியில் கணக்கு இருக்கிறதோ அந்த வங்கி உத்தரவாதம் அளிக்காவிட்டால் தாங்கள் நான் செலுத்திய பணத்தை திரும்பத் தரமுடியாது என்று கூறிவிட்டார்கள்.

எனது வங்கியோ நிரந்தரப் பணி இல்லாத ஒரு வெளிநாட்டு மாணவனாகையால் அத்தகைய உத்தரவாதம் தம்மால் அளிக்க முடியாது என்று கூறிவிட்டார்கள்.

கலங்கினேன். எதுவுமே செய்ய முடியாதவனாக தூக்கமின்றிச் சில நாட்கள் தவித்தேன். 

என் நண்பனுக்கோ அக்கல்லூரியில் அனுமதி கிடைக்காமல் போய் விட்டது. 

அன்றாடம் இரவினில் காவலாளியாக வேலை செய்து பகலினில் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்த எனக்கு எனது கல்லூரிக் கட்டணம் கட்டவே அல்லல் படும் நிலை.

என்னால் இழந்த என் நண்பனின் பணத்தை ஈடு கட்ட முடியாது போய் விட்டது.

அந்நண்பனும், அவனது பெற்றோரும் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டார்கள். 
அவனது பணத்தை நான் செலவு செய்து விட்டேன் என்று சந்தேகித்து ஈழத்தில் எனது பெற்றோரைத் தேடிச் சென்று என்மீது இருந்த ஆத்திரத்தைத் தீர்த்துக் கொட்டி விட்டார்கள்.

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் என்னும் குறளுக்கேற்ப வாழ்வேன் என்று எண்ணியிருந்த என் தாயால் கண்ணீர் வடிப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும் ?

அதற்கீடான தொகையை அவர்களுக்கு கொடுக்குமாறு என் பெற்றோரை வேண்டிக் கொள்வதை விட வேறு வழி தெரியவில்லை (இதுகூட ஒரு பொறுப்பற்ற தன்மை என்றே இப்போது எனக்குப் படுகிறது). 

வாழ்வில் சில கணங்களில் நாம் எடுக்கும் அவசர முடிவுகள் எத்தகைய விபரீத விளைவுகளில் கொண்டு எம்மைத் தள்ளி விடும் என்பதை ஓரளவு படித்துக் கொண்டேன்.

அந்நண்பனினதும், அவனது பெற்றோரினதும் கோபத்தை நான் நன்கு புரிந்து கொண்டேன். 

அது நியாயமானதே ! 

பணத்தை இழந்து விட்டோம் என்பதைத் தவிர எனக்கு இன்றுவரை வேதனையளிப்பது இரண்டு விடயங்கள். 

ஒரு நல்ல நண்பனின் நட்பை இழந்து விட்டேன், என்னத் தமது கண்ணின் மணிபோலக் காத்த எனதருமை பெற்றோரைக் கலங்க வைத்து விட்டேன் என்பவையே அவை.

இன்று அந்த நண்பன் மிகவும் நல்ல நிலையில் வெளிநாடொன்றில் வாழ்ந்து வருகின்றான் என்பதை அறிவேன். 

காலம் ஒருநாள் கண் திறக்கும் போது மீண்டும் அவனது தொடர்பு எனக்குக் கிடைக்கும் என்று  திடமாக நம்புகிறேன்.

பின்னால் எனக்குத் திருமண பின்பு பல சமயங்களில் என் அன்பு மனைவி எனக்கு சுட்டிக்காட்டி எனது  தவறுகளை, பொறுப்பற்ற தன்மையை விளக்கி என்னை வளப்படுத்தினாள். 

அப்படி சொல்லும்போது  உடனடியாக நான் அவள்மீது கோபம் கொண்டாலும் அவளது வழிகாட்டுதலில் உள்ள நியாயங்களைக் கண்டு நான் அதிசயிப்பேன். 

இப்படி ஒரு அருமையான தோழியை எனக்கு மனைவியாக்கிய அந்த இறைவனுக்கு என் மனம் ஆயிரம் நன்றிகளைச் சொல்லிக் கொள்ளும்.

பல வருடங்களின் பின்னால் என் பெற்றோர் லண்டனில் வாழ்ந்து வந்தார்கள்.
 
அப்போது ஒருநாள் என் தந்தையுடன் நான் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருக்கும் போது இச்சம்பவத்தைக் குறிப்பிட்டு, அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்ட போது அவர் கூறிய வாசகம் இன்றும் என் நெஞ்சில் அழியாது நிலை பெற்றிருக்கிறது,

" என் மகனை நான் எப்படி வளர்த்தேன் என்று எனக்குத் தெரியும், நீ எப்போதுமே மற்றொருவர் பணத்தை எடுத்துக் கொள்ளும் மனம் கொண்டவனில்லை என்பதை அறிவேன், நானோ அம்மாவோ என்றுமே உன்னைச் சந்தேகித்ததில்லை" என்று அவர் சசொன்னதும் என் கண்களில் இருந்து நீர் சொட்டியது.

இன்றும் இந்த வாசகங்களை எழுதும் போது என் தந்தையின் உருவத்தைக் கண்களில் வைத்துக் கண்ணீர் அபிஷேகம் செய்கிறேன். 

என்ன சக்தி ஒரேயடியாகப் பிதற்றுகிறானே என்று எண்ணுகிறீர்களா?

கவசம் களைதல் என்பார்களே அது இதுதான்.

 ஆம் மனதிலுள்ள கவசத்தைக் கழற்றி எம்மை நாமே அலசிக் கொள்ளும் போது சிலவேளைகளில் அது மற்றவர்களுக்கு உபயோகமான உகந்த அனுபவமாக ஆகும் சந்தர்ப்பம் கிட்டுகிறது.

உள்ளத்தில் அலையாடும் எண்ணங்கள் பல எப்போதும்  இதயத்தின் ஒரங்களை உரசிக் கொண்டுதான் இருக்கும். 

சில நேரங்களில் இவ்வுரசல்கள் இதமாக இருக்கும், சில நேரங்களில் வலியாக இருக்கும்.

உண்மைகள் உதிர்ந்து சருகாகும் போது அது குளிருக்கு இதமூட்டும் தீயை வளர்க்க உதலாம் எனும் ஒரு நப்பாசையே. 

இளவயதுகளில் பொறுப்பற்று நடப்பது பலருக்குப் பொதுவானது. ஆனால் எதையும் ஆழமாகச் சிந்தித்து செயற்படப் பழகிக் கொள்வது மிகவும் முக்கியம்.

மகாகவி பாரதியார் ஒருமுறை ஒரு அறிந்தவருக்கு கடிதம் வரைந்த போது " தம்பி உன் உள்ளத்தில் உண்மை இருந்தால் எழுதுகோலை எடு, எழுது " என்று எழுதியிருந்தார்.

மனதோடு நான் பேசுபவை எல்லாம் உள்ளத்தினுள்ளே உறைந்து கிடக்கும் உண்மைளை என் இதயம் நிறைந்த அன்புள்ளங்களோடு பகிர்ந்து கொள்ளும் நோக்கத்திலேயே.

மீண்டும் பேசுகிறேன்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

0 Comments:

Post a Comment

<< Home