Sunday, August 27, 2023

என் மன வானிலே !

ஓடிக் கொண்டிருக்கும் இந்த அவசர உலகிலே உள்ளத்தில் அலையாடும் உணர்ச்சி வெள்ளத்திற்கு வடிகால் அமைக்க வேண்டிய தேவையேற்படுகிறது.

அத்தகைய ஒரு வடிகாலின் மூலம் உள்ளத்தின் வெள்ளத்தை அன்பு உள்ளங்கள் எனும் தோட்டத்தை நோக்கிப் பாய்ச்சும் போது அவை விரயமாகிப் போகாமல் இருப்பது போன்ற ஓர் அமைதி ஏற்படுகிறது.

வாழக்கை எனும் சதுரங்கப் பலகையில் நாமனைவரும் வெறும் பகடைக் காய்களே !

போக வேண்டாம் எனும் திசையை நோக்கி உருட்டப் படுகின்றோம்,

போக வேண்டும் எனும் இடமோ கண்ணுக்கு எட்டாத தூரத்தில் இருந்து எமைப் பார்த்து கண் சிமிட்டுகிறது.

விரக்தியில் விழுந்து விடுவதால் நாமடையப் போகும் பலன் எதுவுமேயில்லை .

எமது கட்டுப்பாட்டுக்கு அப்பால் எம்மால் தடுக்க முடியாமல் எம் வாழ்வில் நிகழும் நிகழ்வுகளை அதுதான் வாழ்க்கையின் யதார்த்தம் என்று கொள்ளும் ஒரு மனப்பக்குவமே நாம் தேர்ச்சி பெற வேண்டிய சோதனை.

வேண்டாதவை எமது கைகளில் விழும்போது அதை எப்படி எமக்கு வேண்டுபவையாக மாற்றும் யுக்தியை கற்றுக் கொள்வதே வாழ்வில் எம் முன்னால் உள்ள மிகப் பெரிய சவாலாகும்.

எமது அருகிலிருக்கும் மிகவும் உகந்த சந்தர்ப்பங்களை அடையாளம் காணத் தவறி எமது வாழ்வுப் பாதையில் பலதூரம் நடந்து விடுகிறோம்.

ஓரிடத்தில் உட்கார்ந்து நாம் கடந்து வந்த பாதையை அசை போடும்போதுதான் நாம் தவற விட்ட சந்தர்ப்பங்களின் அருமை புரிகிறது.

ஆனால் அதைத் திரும்பப் பெறுவது என்பது முடியாத காரியம்.

சந்தர்ப்பம் எம் வீட்டுக் கதவை ஒருமுறைதானே தட்டும் !

அன்பு , அன்னியோன்யம் என்பனவற்றிற்கு நேரம் இல்லாதவாறு வாழ்க்கையின் தேவைகள் மனிதரை அவசரமான ஓட்டத்தில் ஈடுபடுத்தி விட்டுள்ளன.

இது யாருடைய தவறுமல்ல இன்றைய காலத்தின் கட்டாயமாக இது நிகழ்கிறது.

எம்மைச் சுற்றி உள்ள அனைவரும் ஒரு ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

அவர்களின் நடுவே நாம் அகப்பட்டுக் கொண்டால் எம்மைக் காப்பாற்றிக் கொள்ள நாமும் அவ்வோட்டப்பந்தயத்தில் இழுக்கப்பட்டுவிடுவது தவிர்க்க முடியாதகிறது போன்றே வாழ்க்கையின் தேவைகளும் சில சமயங்களில் எம்மீது திணிக்கப் படுகிறது.

எமது மனதில் நாம் இலக்குகள் என்று சிலவற்றை வகுத்துக் கொள்கிறோம்.

இவ்விலக்குகளின் நிர்ண்யத்தின் அடிப்படை முக்கியமானது.

எம்மால் நிர்ணயிக்கப்படும் இலக்குகள் அடையக்கூடிய இலக்குகள் தானா என்பது மிகவும் முக்கியமானது.

ஏனெனில் உணர்ச்சிகளின் அடிப்படையில் இலக்குகள் தீர்மானிக்கப்பட்டால் அவைகளைப் பற்றிய அறிவுபூர்வமான சிந்தனை எமை விட்டு அகன்று விடுகிறது.

அறிவுபூர்வமாக சிந்திக்கப்பட்டு எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில் வகுக்கப்படும் இலக்குகளே அவைகளை அடையக்கூடிய சாத்தியக் கூறுகளை எமக்கு அளிக்கிறது.

எமது இலக்குகளை யஉயர்த்திக்கொள்வதோ அன்றி இலட்சியத்தை மென்னேற்றிக் கொள்வதோ தவறில்லை.

உயரப்பாயும் பந்தயத்தைப் அனைவரும் அறிந்திருக்கிறோம்.

அதில் ஒரு உயர்ந்த மட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு அதைப் பாய்ந்து கடக்கும் பயிற்சியில் ஈடுபட்டு அதை எவ்விதத் தடையுமில்லாமல் பாய்ந்த பின்னரே அந்த உயரத்தின் அளவைச் சிறிது கூட்டுகிறார்கள்.

எமது இலக்குகளும் அப்படித்தான் அமைத்துக் கொள்ளப்படுவது அவசியம்.

அடையக்கூடிய இலக்கை அடைந்து விட்டு அடுத்த இலக்கை நோக்கி குறி வைக்க வேண்டும்.

போகும் பாதையில் எத்தனையோ தடைகள் ஏற்படும்.

போடும் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறாமல் போகும்படியான சந்தர்ப்பங்கள் ஏற்படும் ஆனால் அவற்றினால் மனம் ஒடிந்து போய்விடக்கூடாது.

எதிர்கொள்ளும் தடைகளைத் தற்காலிகத் தடைகளாக மாற்ற வேண்டுமேயொழிய அவை நிரந்தரத் தடைகள் என்று எண்ணி அனைத்தையும் கைவிட்டு விடுவது கூடாது.

பயணம் என்று ஒன்று இருந்தால் பாதை என்று ஒன்று இருக்கத்தான் செய்யும் .

பாதை என்று ஒன்று இருந்தால் அதிலே வளைவுகளும், நெளிவுகளும், ஏற்றங்களும், இறக்கங்களும் இருக்கத்தான் செய்யும்.

பயணம் போவது என்று முடிவுகட்டி அதைத் தொடங்கி விட்டால் பாதையில் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் கண்டு அப்பயணத்தைக் கைவிட்டு விட முடியுமா?

நாம் போக எண்ணிய இடத்தை அடைவதனால் எதிர்ப்படும் சிக்கல்களைக் கண்டு பயந்து ஒதுங்கி விடுவது சரியா ?

நாம் கேட்டு இப்பூமியில் பிறக்கவில்லை, எங்கே ? எப்போது ?

யாருடைய வயிற்றிலே பிறக்கப் போகிறோம் என்பது எம்மால் நிர்ணயிக்கப்படுவதில்லை.

காற்றில் அகப்பட்ட சருகு எங்கோ அலைந்து ஓரிடத்தில் விழுவதைப் போல நாமும் ஓரிடத்தில் அவதரிக்கிறோம்.

வாழ்க்கை எம்மீது திணிக்கப்பட்டது என்பதனால் அதை நாம் வெறுக்கவா செய்கிறோம் ?

என்னோடு படித்த பல மாணவர்கள் வாழ்வில் என்னை விட வசதி குறைந்தவர்களாக இருந்தும் தம்முடைய விடாமுயற்சியாலும், கடின உழைப்பினாலும் நன்றாகப் படித்து வாழ்வில் என்னை விட உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள்.

அவர்களைப் பற்றி எண்ணும் போதும் ,
அவர்களைக் காணும் போதும் என் மனம் பெருமிதத்தால் பூரிக்கிறது.

கொடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களின் முக்கியத்துவத்தைச் சரியாக உணர்ந்து கொள்ளாமல் காலத்தை விரயமாக்கியதினால் தாய்நாட்டை விட்டுப் புலம் பெயர்ந்தேன்.

தன் நான்கு பிள்ளைகளில் ஒருவர் கூட தன் கனவின் படி இலங்கைப் பல்கலைக்கழகப் பட்டாதாரியாகவில்லை என்பதைத் தனது தோல்வியாகவோ அன்றி எமது தோல்வியாகவோ எனது அன்பான தந்தை கருதவில்லை.

தான் எம்மீது பொழிந்த அன்பில் எதுவித மாற்றமுமின்றி நாம் வாழ்வில் அடையும் மிகச்சிறிய வெற்றிகளைக் கூட மிகப்பெரிய வெற்றிகளாகக் கொண்டாடினார்.

அவரது இந்தப் பண்பே எனது பல மனமாற்றங்களுக்கு வித்தாக அமைந்தது.

தோல்விகள் என்று வாழ்வில் எதுவுமேயில்லை அவையனைத்துமே வெற்றி எனும் இலக்கை நோக்கிய எமது பயணத்திற்குக் காலம் அமைத்துக் கொடுக்கும் படிகளே அன்றி வேறேதுமில்லை.

இன்று தமிழன்னை தந்த இத்தனை அரிய சொந்தங்களின் மத்தியில் என் மனதில் சிந்துபவைகளை சாரலாகக் கொட்டிக் கொண்டிருப்பேன் என்று ஒரு இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் நான் எண்ணிக்கூடப் பார்த்ததில்லை.

வாழ்க்கை ஒரு நதியைப் போன்றது இதிலே எமது படகினை வரும் வளைவுகளைச் சந்தித்து அதற்கேற்றவகையில் செலுத்திச் செல்வதற்காகவே பல தடவைகள் நாம் பாறைகள் மீது மோதுகிறோம்.

அவையே எமது அடுத்த கட்டப்பயணத்திர்கு எம்மைத் தயார் படுத்தும் அனுபவங்கள் ஆகும்.

ஒருவகையில் பார்த்தால் நாமனைவருமே தெரிந்த ஒரு முடிவை நோக்கித்தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

முடிவு தெரிந்திருந்தும் அம்முடிவினை மட்டுமே எண்ணிக் கொண்டிருக்காமல் இடையில் நடத்தும் பயணத்தை மகிழ்வாகக் கழிக்க எத்தனிப்பதே எமது நோக்கமாக இருக்க வேண்டும்.

அம்மகிழ்ச்சியை எப்படி அடைகிறோம் ?

மற்றவர்களின் மகிழ்ச்சியைப் பார்த்து மகிழ்வது எனும் கலையை எமக்குள் வளர்த்துக் கொண்டுள்ளோமா ?

“ பல நூல் படித்து நீயறியும் கல்வி
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம் "

என்றார் காவியக் கவிஞர் வாலி .

நாளை என்பது நாமனைவரும் அறியாத ஒரு புது அத்தியாயம்.

அதனுள் நுழையும் போது அங்கே எவை எமக்காகக் காத்திருக்கின்றன என்பது ஒரு புரியாத புதிர்,அது புரியாத புதிராக இருக்கும் வரைதான் வாழ்க்கை சுவையாக இருக்கும்.

மனதில் நிரம்பிய உணர்வு வெள்ளத்தின் ஒரு சில துளிகளை என் இனிய அன்பு உள்ளங்களின் உள்ளம் எனும் தோட்டத்தை நோக்கி வடிகாலமைத்துப் பாய்ச்சி விட்டேன்.

இதனால் உங்கள் உள்ளம் சிறிதளவாவது செழிக்குமானால் அதுவே எனது எழுத்துக்கு அக்கலைவாணியும், தமிழன்னையும் கொடுத்த வெற்றி எனக் கொள்வேன்.

மீண்டும் பேசுவேன்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

0 Comments:

Post a Comment

<< Home