கருவறையும் . . . . கல்லறையும் . . .
மனிதர்களாகப் பிறந்த எம் எல்லோருடைய மனங்களிலும் ஏதோ ஒரு வகையில் எப்போதும் கவலைகள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன.
கவலைகள் இல்லாமல் மனிதர் வாழும் இடங்கள் கருவறையும், கல்லறையும் தான்.
வாழ்க்கையில் கவலைகள் இருப்பது சகஜம் ஆனால் அந்தக் கவலைகள் தான் வாழ்க்கை என்று மாற்றம் அடைந்து விடாமல் பார்த்துக் கொள்வதே எம்முன்னால் உள்ள சவால்.
எமது தேவைகளை அடுத்தவர் கவனித்துக் கொள்ளும்வரை எமது கவலைகளை அவர்களே தாங்கிக் கொள்கிறார்கள்.
என்று எமது வாழ்வினை எமது கைகளில் எடுத்துக் கொள்கிறோமோ அப்போதே எமது மனதினில் கவலையும் வந்து குடியேறி விடுகிறது.
கவலையில்லாமல் வாழ்ந்து விடுவது என்பது ஒரு யதார்த்தமான் விடயமா? அப்படி இருப்பதாக யாரும் கூறினால் கூட அது அவர்கள் எமக்காகக் கூறும் ஒரு நாகரீகமான பொய்யாகத்தான் இருக்க முடியும்.
எப்போதும் நாம் காணும் போதெல்லாம் சிரித்துக் கொண்டு ஜாலியாக இருக்கும் ஒருவர் எமது கண்களுக்கு கவலையற்றவராகக் காணப்படலாம்.
ஆனால் எம் கண்களுக்குப் புலப்படாத வகையில் அவர்கள் மனதில் எங்கோ ஒரு மூலையில் ஏதோ ஒரு கவலை உரசிக் கொண்டு இருபதைத் தவிர்க்க முடியாது.
அப்படியானல் எப்போதும் கவலைப்பட்டுக் கொண்டிருப்பதே வாழ்க்கை என்று நான் சொல்வதாக யாரும் எண்ணிக் கொள்ளக்கூடாது.
எம்முன்னே ஒரு எதிர்பாராத நேரத்தில் ஒரு எதிர்பாராத செலவு வந்தால் அதனை ஏதாவது வகையில் நாம் சமாளிக்கிறோம் அல்லவா?
அதேபோல வாழ்வில் வரும் கவலைகளையும் அதனுள் எம்மை மூழ்க விட்டு விடாமல் சமாளிப்பததையும் அச்சமாளிப்பை எவ்வகையில் ஒரு அனுபவப் பிரயாணமாக எடுத்து பயணிக்கும் வகையைப் பயிற்சி செய்து கொள்வதின் முக்கியத்துவத்தினையும் சுட்டிக் காட்டும் முகமாகவே என் மனதின் இந்த அலசல்.
மற்றைய உயிர்களின் மதிப்பையுணர்ந்து, எம் மனதின் மென்மையை தக்க முறையில் விளங்கிக் கொண்டு எமது தேவைகளை அதற்குட்படுத்தி வாழும் முறையக் கற்றுக் கொள்வது கவலைகளின் பிறப்பை மட்டுப்படுத்தும் காரணியாகிறது.
நாம் வாழ்க்கையில் எடுக்கும் முடிவுகளே அதன் பாதையைத் தீர்மானிக்கின்றன. நாம் அறிந்தோ, அறியாமலோ செய்யும் தவறுகள் தான் துன்பமாக அதன் மூலம் விளையும் கவலைகளாகப் பரிணமிக்கின்றன.
அந்தத் துன்பங்கள் தந்த கவலைகள் தந்த அனுபவத்தினால் அதே தவறுகளை மீண்டும் இளைக்கக் கூடாது எனும் தெளிவைப் பெற்று வாழமுற்படுவது கவலைகளைக் கட்டுப்படுத்தும் காரணியாகிறது.
தவறிழைப்பது மனமே !
அதே தவற்றை மீண்டும் செய்யக்கூடாது என்பதும் அதே மனமே !
அதற்கான வழியைத் தேர்ந்தெடுத்து அவ்வழியில் நடக்கப் பண்ணுவதும் அதே மனமே !
ஆக மொத்தம் கவலைகளுக்குக் காரணமான அதே மனம் தான் கவலைகளைக் கட்டுப்படுத்துகிறது.
எமது மனங்களின் உயர்வு எந்த அளவுக்கு இருக்கிறதோ அந்த அளவுதான் மனிதனின் உயர்வும் அமைகிறது.
இந்த மனதின் உயர்வுக்கு, அதன் மேன்மைக்கு என விசேடமாக எம்மைப் பயிற்றுவிக்க வேண்டுமா ?
இல்லை நாம் எமை மீறிய ஆன்மீக சித்தாங்களைப் புரிந்து கொள்ள வேண்டுமா ?
இக் கேள்விகளுக்கு இவையனைத்தும் அவசியமில்லை என்பது எனது தாழ்மையான கருத்து.
நாம் நாமாக வாழ்வதற்கென சில பொதுவான விதிமுறைகளை வகுத்துக் கொண்டோமானல் அதுவே எம் மனஉயர்வுக்கு வழி வகுத்துக் கொள்ளும்.
ஒவ்வொருநாள் காலை எழுந்ததும் இந்த நாள் சிறந்தநாளாக அமையப் போகிறது,
நான் யாரோடும் கோபம் கொள்ள மாட்டேன்.
அனைவருடனும் இனிமையாகப் பேசுவேன் என்று நாளைத் தொடங்குவது
எம்மை எதிர்கொள்ளும் பிரச்சனைகளையிட்டு கவலை கொள்ளாது அதனைத் தீர்ப்பதற்கு வழிவகை என்ன என்று தேடுவோம் எனும் மனப்பான்மை
நாம் எதை செய்யப் போகிறோமோ அதை முழு மனநிறைவுடன் செய்வதால் அதனை மகிழ்வுடன் செய்வோம் எனும் நம்பிக்கை.
எம்மிடம் எப்போதும் மகிழ்வான விடயங்கள் இருக்கின்றன.
நாம் அடுத்தவரின் மகிழ்வுக்குக் காரணமாக இருப்போமேயொழிய துயருக்குக் காரணமாக மாட்டோம் எனும் மன உறுதி.
எம்மைச்சுற்றி எது நடந்தாலும் அது நன்மையாகத்தான் இருக்கும் என்பதிலும், நாம் செய்யும் காரியங்கள் அடுத்தவருக்குப் பயன் தராவிட்டாலும் கெடுதல் விளைவிக்காது என்பதிலும் அசையாத நம்பிக்கை கொண்டிருத்தல்
இந்த எளிமையான விடயங்களைக் கடைப்பிடித்து வாழ எம்மைப் பழக்கிக் கொண்டோமானால், கருவறையில் கவலையின்றி ஆரம்பித்துக் கல்லறையில் கவலையின்றித் தூங்கப் போகும் எமது வாழ்வின் இடைப்பட்ட பயணமும் கவலையைப் படகாகப் பிரயோகித்து மகிழ்வுடன் பயணிக்கும் ஒரு பயணமாக இருக்கும்.
இது என் மனதில் விளையும் தாழ்மையான எண்ணங்கள். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஆனந்தமடைகிறேன்.
மீண்டும் வருவேன்
அன்புடன்
சக்தி சக்திதாசன்


1 Comments:
Excellant writing anna.In simple words keeping mind in positive ,and auto suggestion,tips train to keep the positive mind and tips to keep the positive mind are seen in the essay anna.Excellant writing anna
5:00 PM
Post a Comment
<< Home