Tuesday, September 19, 2023

உள்ளத்தின் ஓசை

ஏதோபிறந்தோம்,ஏதோவாழ்கிறோம்,எப்படியோ போகப் போகிறோம் என்று எதிலுமே மனதை லயிக்காமல் வாழ்ந்து விட்டுப் போவது இலகுவான செயலல்ல..

நாம் எப்படித்தான் எத்தகைய பற்றற்ற ஒரு நிலையில் எமது வாழ்வை அமைத்துக் கொண்டு வாழ்ந்தாலும் எம்மைச் சுற்றியுள்ள சமூகத்துடன் ஒட்டாமல் வாழ்வதென்பது இயலாத காரியம்.

அத்தகைய சமூகத்தின் பிணைப்பின் அழுத்தம் பல சமயங்களில் ஈடுபடவேண்டாம் என்று நினைத்து ஒதுங்கும் மனம் கொண்டோரைக் கூட இழுத்து ஈடுபட வைத்து விடுகிறது.

சரியானவழியில் நடக்கிறோம்,மற்றவர்களின் மனதைப் புண்படுத்தாது வாழுகிறோம்என்று எண்ணிக் கொண்டு வாழும்போது எங்கிருந்தோ,யாரோ ஒருவர் எமது செய்கை தம்மைப் பாதித்து விட்டதாக எண்ணிக் கொண்டு எம்மீது மனவருத்தம் கொள்ளுவார்.

ஆமாம் இதுதான் யதார்த்தமான வாழ்க்கை.

அப்படியானல் பின் ஏன் தான் இந்த சித்தாந்தங்கள்,வேதாந்தங்கள்?நியாயமான கேள்விதானே !

எம் வாழ்வில் நிகழும் பல செயல்களுக்கான காரணங்கள் எமக்குத் தெரிவதில்லை.தெரிவதில்லை என்று குறிப்பிடுவதை விடப் புரிவதில்லை என்று சொல்வதே பொருத்தமானது.

பல செயல்கள் எம்மீது நிகழ்த்தப் படுகின்றன. அச்செயல்கள் நிகழ்வதற்கு நாம் எந்த வகையிலும் காரணமாகவில்லை பின் ஏன் அது எமக்கு நிகழ்ந்தது ? எனும் கேள்வி நம் எல்லோருடை ய மனங்களிலும் எப்போதாவதுஎழுந்திருக்கும் என்பதுவே. உண்மை.

அப்போது அதைக் கையாளுவதற்கு இரண்டு வழிகள் இலகுவாக எம்முன்னே தென்படும்.வெறும் விரக்திக்கு ஆட்பட்டு "சே ! முறையாக வாழ்ந்ததால் என்ன பயன் ?“ என்று எண்ணித் தான் தோன்றித்தனமான வாழ்வை முன்னெடுக்கலாம். 

அன்றி எமக்கு நடந்த அந்த நிகழ்விற்கு தத்துவரீதியாக சித்தர்களின் வேதங்களின் வழி ஒரு வழியைக் கண்டு மனதைச் சாந்தப் படுத்திக் கொண்டு நம்பிக்கையுடன் எமது வாழ்வின் நெறிமுறைகளை இன்னும் சீர் படுத்திக் கொண்டு முன்னேறலாம்.

இத்தகைய ஒரு மன ஆறுதலை உள்ளங்களுக்கு வழங்குவது ஒன்றே இந்தச் சித்தாந்த,வேதாந்தங்களின் இருப்பிற்கான காரணம்.

வாழும் முறைகளை மனிதன் சரிவரப் புரிந்து கொள்ளத் தவறுவதாலேயே வாழ்க்கை வெகு சுலபத்தில் பலருக்குச் சலித்து விடுகிறது.

வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகளுக்காக நாம் பணத்தைச் சம்பாதிக்கத்தான் வேண்டும். ஆனால் அந்தப் பணம் "எம்மைச்சம்பாதிக்க" விடாமல் பார்த்துக் கொள்வதில் சிரத்தை எடுக்காமல் போகும் போதுதான் மனிதாபிமானத்தின் அடிப்படையை இழக்க வேண்டி நேரிடுகிறது.

தேடல்களின் வழி எழும் தேவைகளுக்கானஉந்துதல்களே பல விஞ்ஞானிகளையும் அறிவாளிகளையும் எமக்குத் தந்திருக்கின்றன.தாம் அந்தத் தேவைகளை அடைந்த பின்பு அதைத் தேடும் மற்றவர்களுக்கு அத்தேவைகளை மறந்து வாழும்படி போதிக்கும் போதுதான் அங்கே வேறுபாடுகள் வெளிச்சத்திற்கு வருகின்றன.

இதனால்தான் அரசியல்வாதிகள் இரட்டைவேடம் போடுவதும், ஆன்மீகவாதிகள் இரட்டை வேடம் போடுவதும் உலகில் அரங்கேறுகின்றன.

பணம் சம்பாதிப்பதும் தமது எதிர்காலத்திற்கான தேவைகளுக்காய் இப்போதே திட்டமிடுவதும் மனிததர்மத்திற்குப் புறம்பானது என்பது தவறான கருத்து என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

அப்போ எதனால் மனித மனம் குழம்புகிறது?

எமது தேவைகளுக்கான தேடல்களின் போது அத்தேவைகளை எண்ணி ஏங்கி வாழ்வின் நிம்மதியை இழப்பதே மனித மனதின் குழப்பத்திற்குக் காரணம்.

இன்று செல்வந்தன் என்று நம் கண்ணில் தென்படும் ஒருவரின் இன்றைய வாழ்க்கையைக் கொண்டு அவரைக் கணிப்பிடுவது தவறு.அவர் தனது நேற்றைய வாழ்வில் எப்படி இருந்தார்?அவரதுbஇன்றைய வாழ்விற்கான உழைப்பின் வேகம் நேற்று எப்படி இருந்தது? என்பனவற்றை ஆழ்ந்து சிந்திக்கும் போது அவர்களின் வாழ்வின் முன்னேற்றம் எமக்கு அனுபவ பாடமாகிறது.

அதேநேரம் குறுக்கு வழியில்,பிறரை ஏமாற்றி மற்றவர்களுடைய வாழ்வின் அழிவில் தமது வாழ்வை உயர்த்திக் கொண்டவர்களின் பாதையை நன்கு புரிந்து கொள்வதும் அவசியமாகிறது.

என்னுடைய வாழ்வில் நான் கற்றுக் கொண்ட பாடம் கண்ணால் காண்பதும்,காதால்கேட்பதும் என்றுமே உண்மை என்று எண்ணக் கூடாது. முன்னோர்களின் வார்த்தைகளின் படி "தீரவிசாரிப்பதே உண்மை".

மகிழ்ச்சியைத் தேடி எமது வாழ்க்கையில் நாம் ஓடுவதை விடுத்து. இன்றைய பொழுதை இன்றைய பொழுதாக எடுத்து அப்பொழுதில் எமக்கு இருக்கும் வசதிகளை ஏற்றுக் கொண்டு நிம்மதியாக வாழ்ப்பழகினால் வாழ்வில் மகிழ்ச்சி தானாக.நிலை கொள்ளும்.

மகிழ்ச்சி என்பது எங்கோ புதைத்து வைக்கப்பட்டிருக்கும் புதையல் அல்ல அன்றாட வாழ்க்கையின் நிம்மதியே மகிழ்ச்சி.

பிறர் உயர்வினிலே எமக்கிருக்கும் பெருமையில் உறைந்திருப்பது மகிழ்ச்சி.

இதற்காகவே எனது எழுத்துக்களின் மானசீகக் குரு கவியரசர் கண்ணதாசன்,

“உனக்கும்கீழே உள்ளவர் கோடி
நினைத்துப்பார்த்து நிம்மதி தேடு "

என்றார்.

என் இனிய உள்ளங்களே !இந்த வாழ்க்கை நாம் கேட்டு பெற்றதல்ல.இது எமக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம். என்ற எண்ணத்தில் மூழ்கியிருந்த எனக்கு இப்போதைய ஆன்மீக விளக்கம் அது எமது ஆன்மாவின் திட்டம் எனும் உண்மையை புகட்டுகிறது.

இந்த அடிப்படையில் சிந்திக்கும் போது பல புரிந்து கொள்ள முடியாத நிகழ்வுகளுக்கான  விளக்கம் கிடைக்கிறது.

இவ்வாழ்வில் மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் அதே சமயம் எமது நிம்மதியை இழக்காமல் வாழ்க்கையைரசிக்கத் தேவையான வசதிகளுக்காக நேர்மையாக,நியாயமாகஉழைத்து முன்னேறுவதில் எந்தவிதமான தவறுமில்லை.

வசதி என்னும் ஏணியில் ஏறும் போது உங்களுக்கு மேலே இருக்கும்படியில் இருப்பவரைப் பார்த்து பெருமூச்சு விடாமல் உங்களுக்கு கிழே ஏற முயற்சிக்கும் ஒருவருக்கு கைகொடுத்து உயர்த்திக் கொண்டே முன்னேறுவதில் உள்ள மகிழ்ச்சியும்,நிம்மதியும் வேறு எதிலுமில்லை.

மீண்டும்வருவேன்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

0 Comments:

Post a Comment

<< Home