Wednesday, September 20, 2023

ஆன்மா பேசினால் . . .

ஆன்மா பேசினால் அது என்ன பேசும் ?

ஆயிரம் கேள்விகளை அடுக்கடுக்காய் கேட்குமோ ?

தான் அணிந்து வந்திருக்கும் இந்த உடையான உடலின் பாத்திரப் புரிதலை அறிய ஆவலாய் இருக்குமோ ?

நாம் கேட்டு வாங்கி வந்த பிறப்பின் சூட்சுமைத்தைத் தொலைத்து விட்டுத் தேடுகின்ற தேடல்களின் தேவையின் அவசியத்தை ஆழப் பதித்து விடும் ஆவலில் தவிக்குமோ ?

வெள்ளை உள்ளத்துடன், கள்ளமில்லா மனதுடன் குழந்தையாய்த் தவழும் போதிருக்கும் மனதினைக் கொஞ்சம் கொஞ்சமாக மாயை எனும் திரை போட்டு மறைக்கத்.தொடங்குகிறது உலக இயக்கம்.

தேடலுக்கான தேவையை , தேவைகளுக்கான தேடல்களுக்குள் தொலைத்து விடுகிறோம்.

எமது வாழ்வின் ஆன்மத் திட்டத்தைத் தொலைப்பது கூட அத்திட்டத்தின் அங்கமே !

ஏனேனில் தொலைத்து விட்டால் தான் அனுபவ வளவுகளுக்குள் நுழைந்து தேடி வந்த அனுபவங்களை பெற்றுக் கொள்ள முடியும்.

உள்ளத்தின் ஆழத்துக்குச் சென்று ஆன்மாவின் அனுபவத் தரிசனத்துக்கு தியானமே வழி காட்டுகிறது.

தியானம், ஆன்மா , சுயஅறிதல் எனும் பதங்களைக் கேட்டதுமே ஏதோ " சாமிப் போக்கு " , " பக்தி மார்க்கம் " என்பனவற்றின் அடையாளங்கள் எனும் தப்பான புரிதல்களுக்குள்ளாகி விடுகிறோம்.

அத்தகைய புரிதல்களை உடையவர்கள் ஏதோ இல்லற சராசரி வாழ்வினைத் துறந்தவர்கள் எனும் கோணத்தில் அவர்களைப் பார்ப்பது வழக்கமாகி விட்டது.

இத்தகைய மற்றவர்களை பற்றி நாம் எடுக்கும் தீர்மானங்கள் உண்மைக்குப் புறம்பானவை.

" ஆன்மாவைப் பற்றிப் புரிந்து கொள்வதில் என்ன லாபம் ? " எனும் கேள்வி எனை நோக்கி பலமுனைகளில் எழுவதுண்டு.

விந்தை என்னவெனில் இதே கேள்வியை நானும் கூட ஒரு காலத்தில் கேட்டது மட்டுமல்ல அப்படிக் கேட்பது ஏதோ புரட்சிகரமான செயல் என்று கூட எண்ணியதுண்டு.

ஒரு சராசரி இல்லற வாழ்க்கையை எடுத்துக் கொள்வோம்.

அன்றாட வாழ்வுப் பிரச்சனைகள் ஒரு புறமிருக்க , பாரிய சில பிரச்சனைகள் உடல்.சம்பந்தமாகவோ மனம் சம்பந்தமாகவோ எமக்கு ஏற்படுவதுண்டு.

எம்மில் பெரும்பான்மையோர் அப்பாரிய பிரச்சனைகள் எமக்கு மட்டும் தான் ஏற்பட்டது போலவும், எமக்குத் தெரிந்த மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது போலவும் எண்ணி இடிந்து போய் உட்கார்ந்து விடுகிறோம்.

எனக்கு மட்டும் இது ஏன் இப்போது நடந்தது எனும் கேள்வி பலரின் மனதில் விடையில்லாமல் வினாவிக் கொண்டிருக்கும்.

இதே நிலை ஆன்மாவின் புரிதல்களை அறிந்து தியானம் என்பதைத் தனது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகக் கொண்ட ஒருவரின் நிலையில் பார்ப்போம்.

எமது வாழ்க்கை நாம் கேட்டுப் பெற்றதே ! நடக்கும் அனைத்தும் எமக்கான ஒரு அனுபவப் பாடமே ! என்பதை அவர் அறிந்திருப்பது யதார்த்தமே !

இடிந்துபோய் உட்கார்ந்து மனதினை அலைக்கழிப்பதற்கு பதில் இதிலிருந்து நாம் எதைக் கற்றுக் கொள்கிறோம் என்பதைத்ஜ் தெரிந்து அப்பிரச்சனையிலிருந்து வெளிவருவதற்கான முயற்சியில் ஈடுபடுவார்.

எமக்கு நடக்கும் நிகழ்வுகள் எமது கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் அதனைச் சரியான வழியில் மாற்றுவதும், எமது கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் எம்மீது நிகழ்த்தப்படும் நிகழ்வுகளை ஏற்றுக் கொள்வதும் சுலபமாகி விடுகிறது.

நான் இவ்வுண்மைகளை.அறிந்து கொள்ளும்போது முதுமையின் வாசலுக்குள் காலடி வைத்து விட்டேன்.

ஆனால் கடந்தவைகளை எண்ணிக் கலங்குவதோ தவறான முடிவுகளை எண்ணி வருந்துவதோ அன்றிக் குற்ற உணர்வுக்குள்ளாவதோ தேவையற்றது என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளேன்.

நடந்துபோன நிகழ்வுகளின் தாக்கத்தினால் விளைந்தவைகளின் அனுகூலத்தை எண்ணிப்பார்த்து வியக்கு முடிகிறது.

இத்தனை காலமும் நடந்தவைகள் நல்ல முடிவையே ஈந்திருக்கின்றன எனும் எண்ணம் வரப்போகும் காலங்களை நேர்மறையாக எதிர்நோக்க வைக்கின்றன.

புத்த பகவானின் " எண்ணம் போல் வாழ்க்கை " ,சுவாமி விவேகானந்தரின் " நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாக மாறுகிறாய் " என்பதின் ஆன்மீகப் புரிதல்களின் அடிப்படை புரிகிறது.

பகவத்கீதையில் கூறப்படும்,

எது நடந்ததோ அது நல்லதாகவே நடந்தது.

எது நடக்கிறதோ அது நல்கதாகவே நடக்கிறது.

எது நடக்கப் போகிறதோ அதுவும் நல்லதாகவே நடக்கும்.

என்கிற வரிகளின் உண்மை அர்த்தம் புரியும்.

நான் நாத்திகம் பேசுவதை கவர்ச்சிகரமான புரட்சி எனும் வாலிப வனவாசத்தைக் கடந்து ஆத்திகம் என்பது மதவெறியின் பயிலரங்கம் அல்ல அதன் உண்மையான அர்த்தம் மதங்களைக் கடந்த ஆன்மீகம் என்ற உண்மையை உணர்ந்த முதுமையின் வாசலுக்குள் நுழைந்திருக்கிறேன்.

தியானத்தின் வழி சென்று தன்னைத் தானே அறிந்து கொள்ளும் முயற்சியில் உள்ளவர்கள் வாழ்க்கையின் அன்றாட மகிழ்ச்சிகளை அனுபவிப்பதில்லை என்பது தவறான எண்ணமாகும்.

விழிப்புணர்வோடு ஒவ்வொரு கணத்திலும் அக்கணத்துக்குரிய மகிழ்வினை அனுபவிப்பது அனைவரினதும் தார்மீகக் கடமையாகும்.

எங்கே நமது பார்வையை வேறுபடுத்தப் பழகிக் கொள்ள வேண்டும் என்பதே முக்கியமாகிறது.

சாதாரண மகிழ்ச்சியை அனுபவித்து விட்டு அடுத்த செயல் நோக்கி நகர்வது முக்கியமாகிறது. அடைந்த மகிழ்ச்சிக்கணத்துக்குள் சிக்கி விடாமல் வெளிவருவதே சிக்கலானது.

இதற்குரிய மனத்தெளிவைத் தியானம் தருகிறது.

உற்றார் , சுற்றம் எனும் சூழலுக்குள் சராசரி இல்லற வாழ்க்கையை வாழும் ஒருவரால் தியான நெறியின் மூலம் நல்வழிப்பாதையில் , நேர்மறை எண்ணங்களோடு மகிழ்ச்சியாக வாழ்வது சாத்தியமே !

இப்போது திரும்பக் கேட்டுப் பாருங்கள்,
" ஆன்மா பேசினால் ? " நிச்சயமாக மகிழ்ச்சியான வாழ்வின் சூத்திரத்தைப் பகிர்ந்து கொள்ளும்.

ஆனால் . . . .

அதன் குரல் எல்லோருக்கும் கேட்குமா ?

மீண்டும் வருவேன்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

0 Comments:

Post a Comment

<< Home