மூதுரைக்குள் மூழ்கும் போது
மூதுரைக்குள் மூழ்கும் போது
அவ்வையார் எனும் தமிழ் பெண் ஞானி. அற்புதமான கவிதாயினி , சமூக சிந்தனையாளர். அறநெறியின் அடிப்படைத் தூண்.
தமிழ் பாரம்பரியத்தின் நவில்வாய், ஞானத்தின் நிறைபெறல் அவ்வையார். பண்டைத் தமிழின் மிக்க புகழ்பெற்ற பெண் ஞானி, பகுத்தறிவும் கருணையும் கலந்த சொற்களில் தலைமுறைகளை வழிநடத்தியவர்.
அவரது நூலா, 'மூதுரை' ,பண்டைக் கிராம வாழ்க்கையின் ஒளி, நிழல், நடைமுறைகள் மற்றும் மாந்தர் ஒழுக்கத் தர்மங்களை ஓவையாய் புகுத்துகின்றன.
மூதுரை என்பது வெறும் நூல் அல்ல.அது தமிழின் பண்பாட்டு உருவம்.
அங்கு மக்கட்பண்பினதும் ஒழுக்க நெறியினதும் பெருமைகள் பாடல்களாய்ப் பொழிகின்றன.
அவ்வையார் ஊரின் ஏழ்மையும் எளிமையும் வணங்கும்போது, சமூக சிந்தனையின் தீபம் ஏறுகிறது.
1.
மூதுரை வழிநடக்கும் அவ்வையார் வரிகள்,
மூலக் கல்வி போதும் எனும் குரல் வானம் அறையும்.
2.
எழுச்சி காட்டும் திருக்குறளின் துணை,
இக்கவியம்சம் வழிகாட்டும் ஒளி, அவர்தான் அவ்வையார்.
இந்நூலின் முதல் பாடல் தெய்வ வாழ்த்து.
வாக்கு உண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
நோக்கு உண்டாம் மேனிநுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு
இதன் சாதாரண பொருள்,
பூக்களைக் கொண்டு சிவந்த மேனியுடைய விநாயகரது பாதங்களைத் துதிப்பவர்க்கு வாக்குத் திறமையும், நல்ல மனமும், பெருமலரை உடைய லக்ஷ்மியின் கடாக்ஷமும், நோயற்ற வாழ்வும் கிடைக்கும்
அவ்வையார் அருளிய மூதுரை என்பது தமிழரின் வாழ்வியல் நெறிமுறைகளையும், அறத்தையும், ஆன்மிகத்தையும் ஒருங்கிணைத்த நூலாகும்.
அதன் தொடக்கத்தில் வரும் "வாக்கு உண்டாம்..." என்ற பாடல், விநாயகரை வணங்கும் வழியாக நன்மைகள் எவ்வாறு நம்மை அணுகுகின்றன என்பதை அழகாக விளக்குகிறது.
இந்தப் பாடல், ஒரு பக்தனின் வாழ்க்கையில் சொல், சிந்தனை, செல்வம், உடல், ஆன்மா ஆகிய அனைத்தும் சீராக இருக்க வேண்டுமென்ற எண்ணத்தை முன்வைக்கிறது.
விநாயகரின் பாதங்களை தவறாமல் சார்வதன் மூலம், மனிதன் தன் வாழ்க்கையை முழுமையாக வளப்படுத்த முடியும் என்பதே இதன் மையக் கருத்து.
வாக்கு உண்டாம்
இது சொல்வன்மை அல்லது வாக்குத்திறன் என்பதைக் குறிக்கிறது.
விநாயகரை வணங்குவோர், தங்கள் பேச்சில் தெளிவும், நயமும், செல்வாக்கும் பெறுவர்.
நல்ல மனம் உண்டாம்
இது நல்ல எண்ணங்கள், அன்பும், கருணையும் நிறைந்த மனநிலை என்பதைக் குறிக்கிறது.
விநாயகரை வழிபடுவோர் மனநலத்துடன் வாழ்வர்; தீய எண்ணங்கள் அவரைத் தொட்டுவிடாது.
மாமலராள் நோக்கு உண்டாம்
இங்கு மாமலராள் என்பது மகாலட்சுமி, செல்வத்தையும் அருளையும் வழங்கும் தெய்வம் என்பதைக் குறிக்கிறது.
விநாயகரை வணங்குவோருக்கு மகாலட்சுமியின் அருள் பார்வை கிடைக்கும்; அதாவது செல்வம் பெருகும் என்கிறார்
மேனி நுடங்காது
இது உடல் உறுதி, ஆரோக்கியம், சோர்வில்லாத நிலை என்பதைக் குறிக்கிறது.
விநாயகரின் அருளால், உடல் வலிமை, சுறுசுறுப்பும் நிலைத்திருக்கும் இதுவே பொதுப் பொருளாகிறது.
பூ கொண்டு துப்பார் திருமேனி
இங்கு துப்பு என்பது பவளம்.
விநாயகரின் திருமேனி பவள நிறத்தில் ஒளிரும் என்கிறார்.
பூ கொண்டு என்பது,
மலர்களால் அலங்கரிக்கப்படும் அழகிய உருவம்.
தும்பிக்கையான் பாதம்
தும்பிக்கையான் என்பது விநாயகர், யானைமுகம் கொண்டவர்.
அவருடைய பாதங்களை வணங்குவோர் என்ற அடையாளம்.
தப்பாமல் சார்வார் தமக்கு
விநாயகரின் பாதங்களை தவறாமல் சாரும் பக்தர்களுக்கு, மேலே கூறிய எல்லா நன்மைகளும் கிடைக்கும்:
- சொல்வன்மை
- நல்ல மனநிலை
- செல்வ அருள்
- உடல் உறுதி
- ஆன்மிக வளம்
இதையே இந்தப் பாமரன் என் எளிமையான வரிகளில் ஒரு கவிதையாக்கிப் பார்க்க ஆசையுற்றதன் விளவு ,
நல்ல சொற்கள் பேச வைக்கும்
நல்ல மனதைத் தருவார்
நலம்பெறலோ இலட்சுமியின்
நோக்கு நமக்குக் கிடைக்கும்
உடலும் வலிமை பெறுமே
சோர்வின்றி செயல்படலாம்
பவள நிறமேனியாய்
யானைமுகத் தெய்வமே
அருளால் நிறைந்த பாதத்தை
அழியா நெஞ்சில் வணங்கினால்
அனைத்தும் நமக்கே சாத்தியமே
ஆராதனை தவறாதாயின்!
சக்தி சக்திதாசன்


0 Comments:
Post a Comment
<< Home