Thursday, June 11, 2026

மகிழ்ச்சி — உள்ளிருந்து மலரும் ஒளி

மகிழ்ச்சி — உள்ளிருந்து மலரும் ஒளி

மகிழ்ச்சி என்பது மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் தேடிக்கொண்டே இருக்கும் ஒரு நித்திய நாட்டம். 

அது கிடைக்கும்போது உலகம் பொன்னாய்த் தெரிகிறது.

அது நழுவும்போது வாழ்க்கையே வெறுமையாய் உணர்கிறது.
    
ஆனால், இந்தத் தேடலில் மிகப்பெரும் முரண் ஒன்று மறைந்திருக்கிறது .

நாம் தேடுவதை நம்முள்ளேயே வைத்துக்கொண்டு, வெளியே அலைந்து திரிகிறோம். 

ஒரு விளக்கை கையில் ஏந்திக்கொண்டு, இருளில் தனது நிழலை தேடுவது எவ்வளவு அபத்தமோ, அதைப் போலவே மகிழ்ச்சியை வெளியே தேடுவதும் வாழ்வின் மிகப்பெரிய அபத்தம்.

மகிழ்ச்சி என்பது மனிதனின் இயல்பு என்று சொல்லும்போது, அது வெறும் தத்துவ வாதமல்ல  அது ஆழமான உண்மை. 

ஒரு குழந்தை பிறக்கும்போது எந்தக் காரணமும் இல்லாமல் சிரிக்கிறது. 

அதற்கு செல்வமில்லை, புகழில்லை, அந்தஸ்தில்லை  ஆனால் அது மகிழ்ச்சியாக இருக்கிறது. 

அந்த மகிழ்ச்சி அதன் இயல்பிலிருந்து வருகிறது.
    
வெளியிலிருந்து வரவில்லை. 

வளர வளர, சமூகம் நம் மனதில் ஒரு தவறான விதையை விதைக்கிறது  "இது கிடைத்தால் மகிழ்வாய்.

அது நடந்தால் சந்தோஷப்படுவாய்" என்று. 

மெல்ல மெல்ல நாம் நம் இயல்பை மறந்து, நிபந்தனைகளின் அடிமையாகிவிடுகிறோம்.

வெளியே மகிழ்ச்சி தேடுவதில் என்ன தவறு என்று யாரேனும் கேட்கலாம். 

செல்வம் சேர்வதில் மகிழ்ச்சி இல்லையா? 

பதவி கிடைப்பதில் மகிழ்ச்சி இல்லையா? என்று எண்ணலாம்.
    
உண்மையில், அந்தத் தருணங்களில் மகிழ்ச்சி இருக்கிறது.

ஆனால் அது நிலையானதல்ல.
    
அது மின்னல் போல் வீசும் ஒரு நொடியில் மறையும். 

ஏனென்றால் வெளி உலகம் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது. 

இன்று இருப்பது நாளை இல்லாமல் போகலாம். 

அந்தஸ்து குலையலாம், உறவுகள் முறியலாம், சேர்த்த செல்வம் சிதறலாம். 

வெளியில் கட்டிய மகிழ்ச்சியின் அரண், வெளியின் மாற்றங்களுடன் இடிந்து விழுகிறது. 

எனவே, வெளியை நம்பி நிர்மாணிக்கும் எந்த மகிழ்ச்சியும் அடித்தளமற்ற கட்டடம் போன்றது.

இதற்கு மாறாக, உள்ளே தேடும் மகிழ்ச்சி வேறொரு தன்மை கொண்டது. 

அது வசந்தத்தில் மட்டும் பூக்கும் மலரல்ல.

கோடை வெயிலிலும், குளிர் மழையிலும் கூட அது உயிரோடு இருக்கும். 

ஏனென்றால் அது வெளி சூழலைப் பொருட்படுத்துவதில்லை.
    
உள்மகிழ்ச்சி என்பது ஒரு அமைதியான ஆற்றல்.

அது தோல்வியிலும் தளராத நிலை இழப்பிலும் உடையாத மனம் வலியிலும் வாழ்க்கையை ஆலிங்கனம் செய்யும் தெளிவு.
    
இதை விவரிக்க ஒரு உவமை உதவும் கடலின் மேற்பரப்பில் அலைகள் கொந்தளிக்கலாம் ஆனால் அடி ஆழத்தில் பேரமைதி நிலவுகிறது. 

வெளி சூழல் என்பது அலைகள் உள்மகிழ்ச்சி என்பது அந்த ஆழத்தில் உள்ள அமைதி.

உள்ளே தேடுவது என்பது என்ன, எப்படி என்ற கேள்வி இயல்பாக எழும். 

இது துறவறமல்ல வாழ்க்கையை புறக்கணிப்பதும் அல்ல. 

உள்ளே தேடுவது என்பது முதலில் தன்னை அறிவது  "நான் யார்? என் மகிழ்ச்சி எங்கிருந்து வருகிறது? எது என்னை உண்மையாகவே நிறைவடையச் செய்கிறது?" என்று நேர்மையாகக் கேட்டுக்கொள்வது.
    
இந்தத் தேடல் ஒரு முயற்சி அல்ல  ஒரு விழிப்பு. 

நாம் யாரோ ஆவதற்கு முயல்வதல்ல நாம் என்னவோ, அதாக இருப்பதற்கு திரும்புவது.

இன்றைய உலகில் இந்த உண்மையை உணர்வது இன்னும் அவசியமாகியிருக்கிறது. 

சமூக ஊடகங்கள் நம்மை தொடர்ந்து வெளியுலகோடு ஒப்பிட வைக்கின்றன. 

அடுத்தவர் வாழ்க்கை, அடுத்தவர் வெற்றி, அடுத்தவர் சிரிப்பு  இவை நம் மகிழ்ச்சியின் அளவுகோலாகிவிட்டன. 

இந்த ஒப்பீட்டு மனநிலை நம்மை நம்மிடமிருந்தே பிரிக்கிறது.
   
மற்றவர் வாழ்க்கையை வாழ்வதற்கு முயன்று, நம் சொந்த வாழ்க்கையை வாழ்வதை மறந்துவிடுகிறோம். 

இந்நிலையில், "வெளியே தேடுவதுதான் தவறு" என்ற எச்சரிக்கை மிகவும் காலத்தினதாகிறது.

மகிழ்ச்சியை விரும்புவதில் தவறில்லை என்பதும் இந்தச் சிந்தனையின் மற்றொரு ஆழமான பரிமாணம். 

பல நூற்றாண்டுகளாக, சில சமயங்களும் சில தத்துவங்களும் மகிழ்ச்சியை விரும்புவதையே பாவமாகவோ, அல்லது பலவீனமாகவோ சித்தரித்தன.
    
துன்பத்தில் பெருமை காண்பதை உயர்வாகக் கருதின. 

ஆனால் உண்மையான ஞானம் சொல்வது வேறு மகிழ்ச்சி என்பது வாழ்வின் இயல்பான நிலை.

அதை விரும்புவது ஆரோக்கியமானது.
    
ஒடுக்கப்படவேண்டியது அல்ல மலரவிடப்படவேண்டியது. 

தவறு மகிழ்ச்சியை விரும்புவதில் இல்லை அதை தவறான இடத்தில் தேடுவதில்தான் இருக்கிறது.

வாழ்வின் இந்தத் தத்துவம் நமக்குத் தரும் செய்தி தெளிவானது.

வெளியே கிடைப்பவை வரவேற்கத்தக்கவை, ஆனால் நம்பிக்கைக்கு உரியவை அல்ல.
    
உள்ளே இருப்பதுதான் நிலையானது. ஆகாயம் மேகங்களால் மறைக்கப்படலாம், ஆனால் மேகங்கள் நீங்கும்போது ஆகாயம் அப்படியே இருக்கும்  மாறாமல், குறையாமல். 

நம் உள்மகிழ்ச்சியும் அப்படிப்பட்டதே. 

சூழல்கள் மறைக்கலாம் ஆனால் அழிக்க முடியாது. 

அதை கண்டடைய வேண்டுமென்றால் வேறெங்கும் போக வேண்டியதில்லை சற்று நிதானித்து, உள்ளே திரும்ப வேண்டும். 

அந்த திரும்பல்தான் மனித வாழ்வின் மிக முக்கியமான பயணம்.

அன்பன்
சக்தி சக்திதாசன்

0 Comments:

Post a Comment

<< Home