விரிக்காதவரை சிறகுகள் கூட பாரம் தான் !
சிறகுகளை விரித்துப் பார்க்காதவரை பறவைக்கு அதுகூட பாரமாகத்தான் தெரியும்.
ஆனால் கஷ்டப்பட்டு சிறகுகளை விரித்து விட்டால் வானம் கூட தொடும் தூரத்திலே எனும் நம்பிக்கையைப் பெற்று விடுகிறது.
நாம் முயற்சிக்காதவரை, நம்மால் முடியும் எனும் நம்பிக்கை கொள்ளாதவரை எந்த ஒரு சிறு காரியமும் ஒரு பெரிய சிக்கலாகத்தான் தோன்றும்.
அன்னை தந்தையின் அரவணைப்பிலே வாழ்கிறோம்.
வளர்ந்து பெரியவரானதும் ,எமக்கென்று ஒரு குடும்பம் வந்ததும் நம் அன்னை தந்தை இலகுவாக எமக்காற்றிய பணிகளெல்லாம் இப்போ நாம் எமது குடும்பத்துக்காக ஆற்றும் போது மிகப்பெரும் சிக்கலாகத்தான் தோன்றும்.
திறமை என்பது ஏதோ ஒரு சிலருக்கு மட்டும் ஆண்டவன் கொடுத்தனுப்பும் பரிசல்ல.
அது எம் அனைவருக்குள்ளும் இருக்கும் ஒரு மூலதனமாகும் .
என்ன ஒவ்வொருவருக்கும் அது வித்தியாசமான துறைகளிலே மிளிரும்.
ஆனால் எமக்குள்ள திறமையை அதற்குரிய சரியான துறையைக் கண்டெடுத்து அதனை விரிவுபடுத்துவதே எமக்கான சவாலாக அமைகிறது.
சிலருக்கு அது வெகு இலகுவாக அவர்கள் நடந்து கொண்டிருக்கும் பாதையிலேயே அமைந்து விடுகிறது.
மற்றும் பலருக்கோ பல திசைகளில் பயணப் பாதையை மாற்றியமைக்கும் போதுதான் அவர்களது திறமைக்கான சரியான பாதையைக் கண்டெடுக்க முடிகிறது.
இங்கேதான் நம்பிக்கையின் வலு உதவுகிறது.
தன்னம்பிக்கை அற்றோர் வெகு விரைவில் மனம் தளைர்ந்து போய் விரக்தியில் தமது பயணத்தையே கைவிடும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
அப்படி இந்தத் தன்னம்பிக்கையின் விசேடம் தான் என்ன ?
தன்னம்பிக்கைக்கும் ஆணவத்திற்கும் இருப்பது ஒரு துல்லியமான வரம்பே !
தன்னம்பிக்கை தனது வரம்பை மீறும் போது அது ஆணவமாக உருப்பெறுகிறது.
என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை .
என்னால் மட்டும் தான் முடியும் என்பது ஆணவம்.
என் வாழ்வினில் என்னால் செய்ய முடியாதவற்றை வீண் வீம்பினால் செய்ய முடியும் என்று மூக்குடைபட்ட காலங்களும் உண்டு அதே போல இலகுவாக செய்யக்கூடியவற்றை என்னால் முடியுமா ?
என்று தன்னம்பிக்கையை கைவிட்ட காரணத்தினால் செய்யத்தவறிய காலங்களும் உண்டு.
இது எனது கடந்த கால கசப்பான அனுபவங்கள்.
ஆனால் அப்போது என்கூட சில அறிவுரை கூறக்கூடிய நல்ல நண்பர்களும் இருந்தார்கள்,தாம் அறிவுரை கூறினால் நான் எனது வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டால் எங்கே தமக்கு என்னால் கிடைக்கும் அனுகூலங்கள் கிடைக்காமல் போய்விடுமோ எனும் அச்சத்தினால் அறிவுரை கூறாமல் விட்ட சுயநலமிக்க நண்பர்களும் இருந்தார்கள்.
இவைகள் நான் எனது புலம்பெயர் வாழ்க்கையில் கண்ட அனுபவங்கள்.
ஆனால் இவற்றின் தாக்கங்களை சரியாக நான் அறிந்து கொள்ளும் போது வாழ்க்கையின் அரைப்பகுதியைக் கடந்து விட்டேன்.
எல்லாவற்றிற்கும் எது காரணம் என்று பார்த்தால் நான் என்மீது கொண்டிருந்த தன்னம்பிக்கையின் வலு குன்றியிருந்ததே காரணம் எனலாம்.
ஆமாம் சிறகுகள் இருந்து விரிக்கப் பயந்த காரணத்தினால் அந்தச் சிறகுகள் எனக்குப் பாரம் எனும் தப்பபிபிராயத்தோடு இருந்ததன் விளைவே அவை.
ஆனால் அந்தச் சிறகுகள் விரிக்கப்பட்டிருந்தால் வானம் கூட தொடும் தூரத்தில் தான் எனும் உண்மை எனக்குப் புரிந்திருக்கும்.
எதையும் நாம் எப்போதும் முடியாது என்று புறந்தள்ளி வைத்து விடக்கூடாது.
எம்மை நாமே பினவரும் கேள்விகளைக் கேட்டுக் கொள்ள வேண்டும்.
என்ன செய்ய விளைகிறோம் ?
அதை ஏன் செய்ய முடியாது ?
செய்ய முடியாத காரணம் நிவர்த்தி செய்யப்படக்கூடியதா ?
நிவர்த்தி செய்யப்பட முடியாதெனில் அச்ச்செயலை விலக்கி வைத்து விட்டு
அடுத்த நடவடிக்கையை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
முக்கியமாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது எமக்குத் தெரியாதவற்றைத் தெரியாது என்று ஒப்புக் கொள்வதற்கான துணிச்சலே !
அதிலே எதுவிதமான அவமானமும் இல்லை.
அறிந்தவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதனால் நாம் எதுவிதத்திலும் குறைந்து போவதில்லை.
தத்துவஞானி சாகிரட்டீஸ் கூறியதாவது
" உலகத்திலேயே நான் தான் அறிவாளி என்று எனக்குப் புரிந்து விட்டது ஏனெனில் எனக்குத் தெரியாதவற்றை நான் எப்போதும் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ள முயல்வதில்லை "
இதுவே ஒரு மனிதன் தன்னைத்தானே அறிந்து கொள்வதன் முதற்படியாகும்.
ஆங்கிலத்தில் அழகாக
" Know your limitations “
என்று கூறுவார்கள்.
எது தவறு ?
நாம் எதற்குமே லாயக்கானவர்கள் அல்ல .
எம்மால் எதுவும் செய்ய முடியாது என்று எண்ணிக் கொண்டு ஒரு மூலையில் உட்கார்ந்து விடுவதுதான் தவறு.
ஓட முடியாவிட்டால் ,/நட அதுவும் முடியாவிட்டால் தவழ்ந்து செல் ஆனால் எப்போதும் ஒரு அடியாவது முன்னேறிக் கொண்டேயிரு என்றார்கள் அறிஞர்கள்.
திறமைகளை வெளிக்கொணருங்கள்.
அதன்மூலம் வாழ்க்கையில் முன்னேற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
உலகில் எமது அறிவிற்கெட்டியபடி நாமாக வாழ்வதற்கு ஒரு சந்தர்ப்பமே தரப்படுகிறது.
அது மீண்டும் எமது கதவைத் தட்டுவதில்லை.
சிறகுகளை விரித்துக் கொள்வோம் ஏனெனில் அந்த வானம் கூட தொடு தூரத்தில் தான் உள்ளது.
மீண்டும் பேசுவேன்
அன்புடன்


0 Comments:
Post a Comment
<< Home