Monday, March 30, 2026

மனதோடுதான் நான் பேசுவேன் . . .

மனதோடுதான் நான் பேசுவேன் . . .

​வாழ்க்கை எனும் இந்த வலையினுள் விழுந்த நாமனைவரும் அவ்வலையிலிருந்து வெளியேறும் ஓர் இலக்கை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறோம்.

​ஆயினும் நாம் அவ்வலையினுள் விழுந்ததிலிருந்து அதிலிருந்து வெளியேறும் நாள் வரை நாம் எமக்கு என பல பாத்திரங்களை வகுத்து அவற்றை உலகமேடையில் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறோம் . .

​நாம் விரும்பியோ விரும்பாமலோ இந்நாடகம் அரங்கேறியபடிதான் இருக்கிறது.

ஆனால் நாம் மனமிசைந்து நடித்தால் அவ்வலைக்குள் நாம் கழிக்கும் காலங்கள் மிகவும் மகிழ்வாக முடியக்கூடியதாக இருக்கும்.

​சிக்கல்கள் இல்லா வாழ்க்கை மனிதருக்கு அமைந்து விடுவது இல்லை.

​பின் எப்படி சிலர் மட்டும் எமது பார்வையில் சிக்கல்களே இல்லாமல் வாழ்ந்து விடுவது போலத் தென்படுகிறார்கள்?

​அதைத்தான் பாரதி சொன்ன "காட்சிப் பிழை" என்று கொள்ள வேண்டும்.

​தமக்கு முன்னால் விழும் சிக்கல்களின் முடிச்சை அவிழ்ப்பதையே ஒரு சவாலாக எடுத்து அதில் வெற்றி காணுவதை மகிழ்வாக எண்ணுவோர்கள் வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ்வது போலத்தான் தென்படும்.

​அதற்காக அவர்கள் வாழ்வில் எதுவித சிக்கல்களுமே இல்லை என்று எடுத்துக் கொள்ளக்கூடாது.

​எதனை வாழ்வில் மிகப்பெரியதாக நினைக்கிறோமோ அதைவிடப் பெரிய விடயத்தை எதிர்கொள்ளும் போது முந்தையது அதன் முன்னால் மிகச் சிறிதாகி விடுகிறது.

​ப்ப்பூ! இதென்ன பிரமாதம் என்று எண்ணத் தோன்றுகிறது.

​எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் தான் வெளிநாடு வந்து விட்டு தானும் தன்னுடைய குடும்பத்தினரும் ஒன்றாக ஏதாவது வெளிநாட்டில் வாழ வேண்டும் என்று எண்ணி அதற்கான முயற்சிகளை எடுத்தார்.

​அம்முயற்சிகள் ஏறத்தாழ நான்கு தடவைகள் தோல்வியுற்றன.
   
அவருக்கு பணச்சிக்கல் ஏற்பட்டது.
​கலங்கவில்லை.

முகத்தில் புன்னகை மாறாமலே காட்சியளித்தார்.

தன்னுடைய முயற்சிகளை மீண்டும் தீவிரமாக்கினார்.

முன்னைய விடக் கடினமாக உழைத்து மீண்டும் முயற்சிப்பதற்கு ஏற்ற நிதிகளைத் திரட்டிக் கொண்டு மீண்டும் முயன்றார்.

​என்னே ஆச்சரியம் தனது முயற்சியில் வெற்றி கண்டு வெளிநாடொன்றில் தன்னோடு தன் குடும்பத்தினரையும் இணைத்து புது வாழ்வைத் தொடங்கினார்.

​ஏன் அங்கு கூட "எனக்கு அதிர்ஷ்டம் இல்லை" என்று அவரை விட நல்ல நிலையில் இருந்து முனகுவோர் மத்தியில் தானே தனது சொந்த வியாபாரத்தை நிறுவி தன்னுடைய குழந்தைகளுக்கு மேம்பட்ட கல்விச் செல்வத்தை அளித்து தனது வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திக் கொண்டார்.

​அப்போதும் அவர் முகத்தில் அதே புன்னகை ஒட்டிக் கொண்டிருந்தது.

​தான் தன்னுடைய முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது தனக்கு இடையூறு செய்யாமல் ஒத்தாசையாக இருந்தவர்களை அவர் எப்போதும் மறந்ததில்லை.

​இது நடந்து ஏறத்தாழ ஒரு நாற்பது வருடங்களுக்கு மேலாக இருக்கும்.
   
இன்றும் அப்போது நான் அவருக்கு ஏதோ சில சிறு உதவிகளைச் செய்தேன் என்பதற்காக என்னுடன் எப்போதும் தொடர்பில் இருக்கிறார்.

​எதற்காக இதனைக் கூறுகிறேன் என்றால் வாழ்க்கையில் சலிப்பு எனும் குதிரையில் நாம் சவாரி செய்யக்கூடாது.

​முயற்சி எனும் குதிரையைத் தெரிவு செய்து அதனை உழைப்பு எனும் கடிவாளத்தினோடு செலுத்த வேண்டும்.

​ஆனால் நாம் பயணிக்கும் அந்தப்பயணத்தில் எம்முன்னே எதிர்ப்படும் தருணங்களில் உள்ள நல்லவற்றை ரசித்து மகிழும் மனப்பாண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

​இதையெல்லாம் காலங்கடந்து உணர்ந்து கொண்ட ஒரு முட்டாள் நான் எனும் யோக்கிதையின் அடிப்படையிலேயே உங்களுடன் மனந்திறக்கிறேன்.

​எப்படியும் வாழலாம் என்பது ஒரு அந்தம், இப்படித்தான் வாழ வேண்டும் என்பது மறு அந்தம்.

இரு அந்தங்களிலும் வாழும் வாழ்க்கை மிகவும் சிக்கலானது.

​ஆனால் இதன் இரண்டுக்குமிடையே எமக்குகந்த கலவையில் வாழ்வை வாழப்பழகிக் கொள்வதே எமது அறிவின் அடையாளம்.

​எமது முதுகில் இருக்கும் அழுக்கு என்றுமே எமது கண்களுக்குப் புலப்படுவதில்லை

ஆனால் அடுத்தவரின் அழுக்குகளைக் கண்டுபிடிப்பதில் நாம் வல்லவர்களாகி விடுகிறோம்.

​மனித வாழ்வு என்பது மிருகத்திற்கும், தெய்வத்திற்கும் இடைப்பட்டதாகும்.

நாம் மிருகமாக மாறுவது சுலபம் ஆனால் தெய்வமாக மாறுவது முடியாத காரியம்.

​வாழ்வின் போக்கு மிருகப்பாதையிலிருந்து தெய்வப்பாதையை நோக்கிய பயணமாக இருப்பின் அதுவே நாம் வாழ்வில் சரியான இலக்கை நோக்கிப் பயணிக்கத் தொடங்கி விட்டோம் என்பதன் அறிகுறி.

​வாழ்க்கை அனுபவிக்கப்பட வேண்டியது, . .

ஆனந்தப்பட வேண்டியது
,
ஆராதிக்கப் பட வேண்டியது

ஆனால் எமது அனுபவிப்புக்கள்
ஆனந்தம்,ஆராதிப்பு அனைத்துமே மனிதம் எனும் எல்லைக் கோட்டைத் தாண்டாமல் வாழப் பழகிக் கொள்வதே சரியான வாழ்க்கை நெறியாகும்
.
​எனக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களின் கனத்தைப் புரியாமல் கைநழுவ விட்ட அனுபவங்கள் பலவுண்டு
.
ஆனால் வாழ்க்கைப் பாதையில் என்னை விட்டு வெகுதூரம் போன பின் தான் அதனை அடையாளம் காணக்கூடிய அளவில் அறிவுமுதிர்ச்சி அற்ற நிலையிலிருந்தேன்

​இப்போ மட்டும் என்ன ?
அறிவு முதிர்ந்து விட்டதா?
இல்லையே!

ஆனால் அதனை நோக்கிய ஒரு பயணத்தில் பல உண்மைகள் கொஞ்சம் கொஞ்சமாய்த் தெளிவாகின்றன
.
​அத்தெளிந்த உண்மைகளை என் அன்பு உள்ளங்களுடன் பகிர்ந்து கொண்டே பயணிப்பது மனதுக்கு இதமாக இருக்கிறது
.
​மீண்டும் பேசுவேன்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

0 Comments:

Post a Comment

<< Home