கடந்தது கடந்தது நிகழ்வில் வாழுவதே நிதர்சனம்.
கடந்தது கடந்தது நிகழ்வில் வாழுவதே நிதர்சனம்.
மனித மனம் எப்போதும் இரண்டு காலங்களுக்கிடையே தவிக்கிறது.
கடந்த காலத்தின் வருத்தங்களிலும், எதிர்காலத்தின் கனவுகளிலும்.
இந்த இரண்டு இடங்களிலும் மனம் தங்கும்போது, நிகழ்காலம் என்னும் அரிய கொடை நம் கைநழுவிப் போகிறது.
குற்ற உணர்வு கடந்த காலத்தை மாற்றாது.
வெறும் ஆர்வமும் கனவும் மட்டுமே எதிர்காலத்தை நம் விருப்பப்படி அமைத்துத் தராது.
உண்மையான அமைதியும் வெற்றியும் முயற்சி, உழைப்பு, மற்றும் வருவதை ஏற்கும் மனப்பக்குவம் என்ற மூன்று தூண்களில்தான் நிலைத்து நிற்கின்றன.
இந்த உண்மையை உள்ளத்தில் ஆழமாகப் பதிய வைத்துக்கொண்டால், வாழ்க்கை எவ்வளவு சிக்கலானதாக இருந்தாலும் நடந்து கடந்துவிட முடியும்.
குற்ற உணர்வு ஒரு பயனற்ற சுமை என்பதை உணர வேண்டும்.
கடந்த காலத்தில் நாம் செய்த தவறுகளை நினைத்து வருந்துவது இயல்பானது.
ஆனால் அந்த வருத்தம் ஒரு எல்லையைத் தாண்டும்போது குற்ற உணர்வாக மாறுகிறது.
குற்ற உணர்வு என்பது ஒரு மனிதனை உள்ளிருந்தே அரிக்கும் புழு.
அது நம்மை நேற்றிலேயே சிறையிட்டு வைக்கிறது.
இன்றையை வாழ விடாமல் தடுக்கிறது.
நடந்துவிட்ட ஒரு நிகழ்வை மாற்ற உலகில் எந்த சக்திக்கும் இயலாது.
ஒரு மனிதன் சொன்ன வார்த்தை காற்றில் கலந்துவிட்டது.
எடுத்த முடிவு வரலாறாகிவிட்டது.
நடந்த செயல் காலத்தின் பதிவேட்டில் பதிந்துவிட்டது.
அதை அழிக்கவோ திரும்பவோ பெற முடியாது.
இதை உணராமல், மனிதன் தன் நினைவுகளின் சிறையில் ஆண்டுகணக்கில் அழுது கொண்டிருக்கிறான்.
தன் தவறை உணர்வது முதிர்ச்சியின் அறிகுறி.
ஆனால் அந்த தவறுக்காக நாளும் தன்னை தண்டித்துக் கொள்வது அறியாமையின் வெளிப்பாடு.
மனநல நிபுணர்கள் சொல்வது என்னவென்றால், தொடர்ந்த குற்ற உணர்வு மனிதனின் தன்னம்பிக்கையை சிதைத்து, முன்னேறும் ஆற்றலையே அழித்துவிடுகிறது என்பதுதான்.
தவறிலிருந்து பாடம் கற்று, திருந்தி, முன்னே செல்வதுதான் தவறுக்கான உண்மையான பரிகாரம்.
குற்ற உணர்வில் மூழ்கி கிடப்பதில் எந்த பரிகாரமும் இல்லை.
வருந்துவதை விட திருந்துவதே உயர்ந்தது.
அழுவதை விட எழுவதே பலமானது.
வெறும் ஆர்வம் மட்டும் போதாது
இன்றைய உலகில் "உன் கனவை நம்பு, அது நிறைவேறும்" என்ற வார்த்தைகள் எங்கும் கேட்கின்றன.
கனவு காண்பது நல்லதுதான்.
ஆனால் கனவு மட்டுமே போதாது என்பது கசப்பான உண்மை.
ஆர்வமும் உற்சாகமும் இருக்கும்போது மனிதன் மலையையும் தூக்கிவிடுவேன் என்று சொல்கிறான்.
ஆனால் அந்த ஆர்வம் குறைந்து சோர்வு வரும்போது, தடைகள் வரும்போது, எதிர்பார்த்தது நடக்காதபோது மனிதன் இடிந்து விழுகிறான்.
பலர் தங்கள் இலக்கை தீவிரமாக நினைக்கிறார்கள், பேசுகிறார்கள், திட்டமிடுகிறார்கள்.
ஆனால் செயல்படுவதில்லை.
இது ஆர்வத்தின் மயக்கம். கனவு காண்பதற்கும் கனவை நிறைவேற்றுவதற்கும் இடையே இருப்பது ஒரே ஒரு பாலம்தான் அது செயல்.
தினமும் கட்டாயமாக, விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், உழைப்பை நோக்கி நகர்வதே அந்தப் பாலத்தை கடக்கும் வழி.
ஒரு விவசாயி வயலை நினைத்து மகிழ்ந்தாலோ, மழை வருமென்று ஆர்வத்துடன் காத்திருந்தாலோ மட்டும் விளைச்சல் கிட்டாது.
அவன் கையில் கலப்பை எடுத்து நிலத்தை உழுதாக வேண்டும்.
வியர்வை சிந்தியாக வேண்டும். அதுவே இயற்கையின் விதி.
வாழ்க்கையின் நியதி.
எத்தனை பெரிய கனவாக இருந்தாலும் அதை நோக்கி நடக்கும் கால்களால் மட்டுமே அடைய முடியும், கண்களால் மட்டும் இல்லை.
முயற்சியும் உழைப்பும் வாழ்வின் தண்டுவடம் என்பதை மறக்க கூடாது.
உலகில் நிலைத்த எந்த சாதனையும் உழைப்பின்றி வரவில்லை.
ஒரு மரம் வளர்வதற்கு ஆண்டுகள் வேண்டும்.
ஒரு திறமை வளர்வதற்கு பயிற்சி வேண்டும்.
ஒரு உறவு மலர்வதற்கு அக்கறை வேண்டும்.
இவை எதுவும் ஒரே இரவில் நிகழ்வதில்லை.
ஆனால் இன்றைய மனிதன் விரைவான பலனை எதிர்பார்க்கிறான்.
தாமதம் தாங்குவதில்லை
.
தடை வந்தால் திரும்பி ஓடுகிறான்.
முயற்சி என்பது ஒரேயடியாக மலையை நகர்த்துவதல்ல.
ஒவ்வொரு நாளும் ஒரு சிறு அடி எடுத்து வைப்பது.
தோல்வி வந்தால் விழுந்த இடத்திலிருந்தே எழுவது.
ஆயிரம் முறை விழுந்த மனிதன் ஆயிரத்தி ஒரு முறை எழுந்தால், அவனே வரலாற்றை எழுதுகிறான்.
எடிசன் மின் விளக்கை கண்டுபிடிக்க ஆயிரக்கணக்கான முறை தோல்வியடைந்தான்.
ஆனால் ஒவ்வொரு தோல்வியும் "இந்த வழி வேண்டாம்" என்று சொன்ன ஒரு பாடமாக மட்டுமே அவனுக்குத் தெரிந்தது.
அந்த உழைப்பின் பயனே இன்று உலகை ஒளிரச் செய்கிறது.
உழைப்பில் மட்டுமே மனிதனுக்கு நிச்சயமான திருப்தி கிட்டும்.
பலன் கிட்டும் என்று உறுதியில்லை.
ஆனால் உழைத்தோம் என்ற உணர்வு, தன்னம்பிக்கையை உருவாக்கும்.
அந்த தன்னம்பிக்கையே அடுத்த முயற்சிக்கான எரிபொருள்.
எனவே, பலன் வருமா என்று யோசிப்பதை விட, இன்று முயற்சிக்கிறோமா என்று கேட்டுக்கொள்வது முக்கியம்.
வருவதை ஏற்றல் வலிமையின் வேர் என்பதே உண்மை.
வாழ்க்கையில் நாம் திட்டமிட்டது எல்லாம் நடப்பதில்லை.
சில நேரம் உழைத்தாலும் பலன் தாமதிக்கும்.
சில நேரம் நேர்மையாக வாழ்ந்தாலும் துரோகம் சந்திக்கும்.
சில நேரம் அன்பு செலுத்தியவர்கள் விலகிப் போவார்கள்.
இவையெல்லாம் வாழ்வின் இயல்பான பகுதிகள்.
இதை ஏற்காவிட்டால், மனிதன் நிரந்தரமான கோபத்திலும், வலியிலும் வாழ்வான்.
"வருவதை ஏற்றல்" என்பது தோல்வியை கொண்டாடுவதல்ல.
சோர்வடைவதும் அல்ல.
அது ஒரு ஆழமான மனப்பக்குவம்.
"இது நடந்தது, இதை மாற்ற இயலாது, இனி என்ன செய்யலாம்?" என்று கேட்கும் முதிர்ந்த மனநிலை.
இந்த மனநிலையை வளர்த்துக்கொண்டவர்கள் புயலிலும் அசையாத மரம் போல் நிற்கிறார்கள்.
வாழ்வின் இன்பங்களை முழுமையாக அனுபவிக்கிறார்கள்.
துன்பங்களையும் முழுமையாக கடந்து செல்கிறார்கள்.
பௌத்த மரபில் "அனித்யம்" என்ற கருத்து இதையே சொல்கிறது
எதுவும் நிரந்தரமில்லை என்று.
நல்லதும் போகும், கெட்டதும் போகும்.
இந்த புரிதல் வந்தால், நல்லது வரும்போது மிகைப்படாமலும், கெட்டது வரும்போது முறிந்துபோகாமலும் இருக்க முடியும்.
இதுவே வாழ்வில் நிலையான அமைதிக்கான வழி.
நிகழ்காலம் என்பதே நம் உண்மையான வீடு.
கடந்த காலம் ஒரு நினைவு மட்டுமே; எதிர்காலம் ஒரு கற்பனை மட்டுமே.
உண்மையில் நாம் வாழ்வது நிகழ்காலத்தில்தான்.
இந்த தருணம் இப்போது சுவாசிக்கும் காற்று, இப்போது செய்யும் செயல், இப்போது உணரும் உணர்வு இவைதான் உண்மையானவை.
குற்ற உணர்வு நம்மை நேற்றில் நிறுத்துகிறது.
வெற்று ஆர்வம் நம்மை நாளையில் தொலைக்கிறது.
முயற்சியும் உழைப்பும் நம்மை இன்றில் வாழ வைக்கின்றன.
வருவதை ஏற்கும் மனம் நம்மை தொடர்ந்து நடக்க வைக்கிறது.
இந்த நான்கும் ஒன்றிணையும்போது, வாழ்க்கை ஒரு சுமையாக இல்லாமல் ஒரு பயணமாக மாறுகிறது.
வாழ்க்கையில் வெற்றி என்பது எல்லாவற்றையும் பெறுவதில் இல்லை.
வருவதை ஏற்று, முயன்று, கொடுத்தது கொடுத்ததை விட்டு, இன்றையை வாழ்வதில்தான் வெற்றி இருக்கிறது.
கடந்தது எம்மை வரையறுக்கட்டும் ஆனால் சிறைப்படுத்த விடக்கூடாது.
எதிர்காலம் எம்மை அழைக்கட்டும் ஆனால் அலைக்கழிக்க விடக்கூடாது.
இன்று நம் கையில் இருப்பதை,நம் முன்னால் இருப்பதை, முழு மனதோடு ஏற்றுக் கொள்வதே வாழ்வின் ஞானம்.
அந்த ஞானத்தை கைக்கொண்டவனே இந்த உலகில் உண்மையான அமைதியோடு வாழ்பவன்.
அன்பன்


0 Comments:
Post a Comment
<< Home