Monday, April 27, 2026

இயந்திரத்தனமான வாழ்க்கை அர்த்தம் தேடும் பயணம்

இயந்திரத்தனமான வாழ்க்கை  அர்த்தம் தேடும் பயணம்

வாழ்க்கை என்னும் ஓட்டப்பந்தயம்
காலை எழுந்திருக்கிறோம். 

பல்லை விளக்குகிறோம். 

காபி குடிக்கிறோம். 

அலுவலகம் போகிறோம். 

மாலை திரும்புகிறோம்.
 
தூங்குகிறோம். 

மறுநாளும் அதே சுழற்சி. 

இந்த வழக்கத்தில் ஒரு நாள் நம்மில் யாராவது திடீரென்று நிறுத்தி யோசிக்கிறோம்.

"நான் வாழ்கிறேனா, இல்லை வெறும் இயங்குகிறேனா?" என்று.
    
இந்தக் கேள்வி மனதில் தோன்றும்போது, நாம் ஒரு முக்கியமான திருப்புமுனையில் நிற்கிறோம் என்று அர்த்தம்.
    
ஆனால் துரதிருஷ்டவசமாக, பலரும் அந்தக் கேள்விக்கு பதில் தேடாமல், மீண்டும் அதே சுழற்சிக்குள் நுழைந்துவிடுகின்றனர்.

இன்றைய உலகம் வேகத்தை மட்டுமே மதிக்கிறது. 

யார் அதிகமாக சம்பாதிக்கிறார்கள், யார் விரைவாக முன்னேறுகிறார்கள், யார் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான வாழ்க்கையை காட்டுகிறார்கள் என்று மட்டுமே அளவிடப்படுகிறது.
    
இந்தச் சூழலில் வளர்ந்த மனிதன், வாழ்க்கையின் அடிப்படையான இன்பங்களை ஒரு மழை நாளின் மணம், அன்பானவருடன் கழிக்கும் மௌனமான ஒரு மாலை, சின்னஞ்சிறு வெற்றியின் திருப்தி இவற்றை உணரவே மறந்துவிடுகிறான்.

அடுத்தவர் வாழ்க்கை என்பது ஒரு கண்ணாடி போன்றது.

மனிதன் எப்போதும் ஒப்பிட்டே வாழ்ந்திருக்கிறான். 

ஆனால் இன்று அந்த ஒப்பீடு ஒரு நோயாகிவிட்டது. 

பக்கத்து வீட்டுக்காரர் புதிய கார் வாங்கிவிட்டார். 

நண்பன் வெளிநாடு சென்றுவிட்டான். 

சகோதரி பெரிய வீடு கட்டிவிட்டாள்.
    
இந்த செய்திகள் ஒவ்வொன்றும் நம் மனதில் ஒரு கேள்வியை எழுப்புகின்றன.

"நான் எங்கே இருக்கிறேன்?" என்று. இந்தக் கேள்விக்கு பதில் தேடும் வேகத்தில், நாம் நம்முடைய இயல்பான பாதையை விட்டு விலகி, அடுத்தவர் காட்டும் திசையில் ஓட ஆரம்பித்துவிடுகிறோம்.

சமூக வலைதளங்கள் இந்த நிலைமையை மேலும் தீவிரமாக்கியுள்ளன.
    
ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையின் சிறந்த தருணங்களை மட்டுமே பதிவிடுகின்றனர். 

யாரும் தங்கள் தோல்விகளை, தனிமையை, கண்ணீரை காட்டுவதில்லை. 

ஆனால் பார்க்கும் நாம், அந்தப் படங்களை முழு வாழ்க்கை என்று நம்பி, நம் உண்மையான வாழ்க்கையை குறைத்தாக மதிப்பிட்டுக்கொள்கிறோம். 

இது ஒரு மாயை. 

ஆனால் அந்த மாயையில் மூழ்கி, நம்மை நாமே இழந்துகொண்டிருக்கிறோம்.

பணம், புகழ், பட்டோபம் மூன்றுமே மாயை இலக்குகள்.

சமூகம் நமக்கு மூன்று இலக்குகளை கொடுத்திருக்கிறது.
    
பணம் சம்பாதி, புகழ் பெறு, ஆடம்பரமாக வாழு. இந்த மூன்றும் கிடைத்தால் மகிழ்ச்சி கிடைக்கும் என்று சொல்லாமல் சொல்லப்படுகிறது. 

ஆனால் உண்மை என்னவென்றால், இந்த மூன்றையும் அடைந்த பலரும் இன்னும் ஒரு வெறுமையை உணர்கிறார்கள் என்பதே.
    
ஏனென்றால் இந்த இலக்குகள் வெளியிலிருந்து திணிக்கப்பட்டவை.

உள்ளிருந்து உதித்தவை அல்ல.

பணம் தேவை, அது உண்மை. பாதுகாப்பான வாழ்க்கைக்கு, குடும்பத்தின் தேவைகளுக்கு, சுதந்திரமாக தேர்வு செய்யும் திறனுக்கு பணம் அவசியம்.
    
ஆனால் பணம் ஒரு கருவி மட்டுமே.
    
அது இலக்கு ஆகிவிடும்போது மனிதன் தன்னையே கருவியாக மாற்றிக்கொள்கிறான். 

புகழும் அப்படியே. மற்றவர்கள் நம்மை நினைக்கிறார்கள் என்ற உணர்வு ஒரு தற்காலிக மகிழ்ச்சியை தருகிறது. 

ஆனால் அந்த புகழ் மறையும்போது, அல்லது வேறு ஒருவர் அதிக புகழ் பெறும்போது, நாம் மீண்டும் வெறுமையில் விழுகிறோம்.

பட்டோபம் என்பது வலியை மூடி மறைக்கும் ஒரு அலங்காரம் மட்டுமே.

இயற்கையான இலக்குகள் என்பவை என்ன?

குழந்தைகளை கவனியுங்கள்.
    
அவர்களுக்கு யாரும் மகிழ்ச்சியாக இருக்க சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை. 

ஒரு சின்ன பூச்சியை பார்த்தாலும் ஆர்வமாக ஓடுகிறார்கள். 

மழையில் நனைவதில் கும்மாளமிடுகிறார்கள். 

ஒரு கதை கேட்பதில் மூழ்கிவிடுகிறார்கள். 

அவர்களின் இலக்கு வேறொன்றும் இல்லை.

இப்போது இருக்கும் தருணத்தில் முழுமையாக இருப்பது மட்டுமே.
    
இந்த இயற்கையான தன்மையை வளரும்போது நாம் இழந்துவிடுகிறோம்.

இயற்கையான இலக்கு என்பது நம் உள்ளிருந்து வரும் அழைப்பு.
    
யாரோ சொன்னதால் அல்ல, யாரை பார்த்து அல்ல நம் இதயம் இயல்பாக நாடுவது. 

ஒருவருக்கு அது இசையாக இருக்கலாம். 

மற்றொருவருக்கு விவசாயமாக இருக்கலாம். 

இன்னொருவருக்கு குழந்தைகளுக்கு கற்றுத்தரும் ஆசிரியர் தொழிலாக இருக்கலாம்.
    
இந்த அழைப்பை கவனமாகக் கேட்டு, அதன்படி வாழும்போது, வெளிப்புற வெற்றிகள் இல்லாமலும் ஒரு ஆழமான மகிழ்ச்சி கிடைக்கிறது.

அர்த்தமுள்ள வாழ்க்கை என்பதுஒரு மறுவரையறை.

வெற்றியை நாம் மறுவரையறை செய்ய வேண்டிய தருணம் வந்திருக்கிறது. 

வெற்றி என்பது அதிக சம்பளம் மட்டுமல்ல.

நாம் செய்யும் தொழிலில் அர்த்தம் காண்பதும் வெற்றியே. 

வெற்றி என்பது பெரிய வீடு மட்டுமல்ல.

நம் வீட்டில் அன்பான உறவுகள் மலர்வதும் வெற்றியே. 

வெற்றி என்பது ஆயிரம் பேர் நம்மை கொண்டாடுவது மட்டுமல்ல.
    
நாம் ஒரு உயிரிடம் ஒரு மாற்றத்தை உண்டாக்குவதும் வெற்றியே.

அர்த்தமுள்ள வாழ்க்கை என்பது சிரமங்கள் இல்லாத வாழ்க்கை அல்ல. 

சிரமங்களை ஒரு நோக்கத்தோடு சந்திக்கும் வாழ்க்கை. 

ஒரு மரம் வளர்க்கிறோம் என்றால், அது தண்ணீர், சூரிய வெளிச்சம், நல்ல மண் என்று பல தேவைகளை கொண்டது. 

அதை கவனமாக பார்க்கும்போது நமது உழைப்பும் இருக்கிறது, ஆனால் அந்த உழைப்பு சுமையாக தெரிவதில்லை ஏனென்றால் அதன் பின்னால் ஒரு அன்பான நோக்கம் இருக்கிறது.

இப்போது வாழ்வது எப்படி?

முதலாவதாக, நிறுத்தி யோசிக்கும் பழக்கம் வேண்டும். 

நாம் ஏன் ஓடுகிறோம், எங்கே போகிறோம், அந்த இலக்கு யாருடையது என்று தெளிவாக கேட்டுக்கொள்ள வேண்டும். 

இந்தக் கேள்விகளுக்கான பதில் வெளியில் இல்லை, உள்ளே தான் இருக்கிறது.

இரண்டாவதாக, ஒப்பிடுவதை குறைக்க வேண்டும். 

அடுத்தவர் வாழ்க்கை அவருடையது.

நம் வாழ்க்கை நமக்கானது. 

ஒரு மாம்பழத்தை ஆப்பிளோடு ஒப்பிட்டு "இது சிவக்கவில்லை, இது உருண்டையாக இல்லை" என்று குறை சொல்வது எவ்வளவு அபத்தமோ, அதேபோலத்தான் நம் வாழ்க்கையை அடுத்தவருடன் ஒப்பிடுவதும்.

மூன்றாவதாக, சிறிய தருணங்களில் மகிழ்ச்சி கண்டுபிடிக்கும் திறனை வளர்க்க வேண்டும். 

காலை வெயில் படும்போது ஒரு கணம் கண்களை மூடி உணர்வது, குழந்தை சிரிக்கும்போது அந்தச் சிரிப்பில் முழுமையாக கலந்துகொள்வது, சாப்பிடும்போது அந்த உணவின் சுவையை கவனமாக ருசிப்பது இந்த சின்னச் சின்ன கணங்களே வாழ்க்கையின் உண்மையான செல்வம்.

வாழ்க்கை என்பது ஒரு சிறந்த கலை.

வாழ்க்கை ஒரு போட்டியல்ல.

அது ஒரு கலை. 

ஒவ்வொருவரும் அவரவர் வண்ணங்களில், அவரவர் தாளங்களில் வரைந்துகொண்டிருக்கும் ஒரு ஓவியம். 

அடுத்தவர் ஓவியம் ஒரு வகையில் இருக்கிறது என்பதால், நம் ஓவியமும் அப்படியே இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

இயந்திரத்தனத்தை உடைக்க பெரிய புரட்சி தேவையில்லை. 

ஒரு சின்ன விழிப்புணர்வே போதும். 

"இப்போது நான் உண்மையில் வாழ்கிறேனா?" என்ற கேள்வியை தினமும் ஒருமுறை நம்மிடம் நாமே கேட்டுக்கொண்டால், வாழ்க்கை மெல்ல மெல்ல அர்த்தம் பெற ஆரம்பிக்கும். 

ஏனென்றால் வாழ்க்கையை வாழ்வதற்கே நாம் வந்திருக்கிறோம்  வெறுமையாக கடந்து செல்வதற்காக அல்ல.

அன்பன்
சக்தி சக்திதாசன்

0 Comments:

Post a Comment

<< Home