: நண்பனுக்கொரு மடல்
அன்பு நண்பா !
மடல் கண்டு நாளாயிற்று என்றே
மனம் வருந்தி நீ யாத்த
மடல் கண்டு கலங்கினேன்
நம் நட்பு எனும் மூன்றெழுத்து உறவின்
நீளத்தை நானறிவேன் நண்பா !
இருப்பதையும் , இல்லாததையும் கொண்டு
ஈர்த்ததல்ல எம் நட்பு அறிவேன்
பிறப்பும், இறப்பும் , உறவும், சுற்றமும்
நாம் கேட்டு வருவதல்ல நண்பா !
நண்பன் என்று நாம் நெஞ்சில்
நிறுத்திக் கொள்ளும் உறவினில்
எம் தேர்வும் கொஞ்சம் கலந்திருக்கும்
உண்மைகள் என்று நாம் கொண்டவை
உலகில் ஏனோ இன்று விலையாகவில்லை
மாயை எனும் தடாகத்தில் பூக்கும்
பொய்த்தாமரைகள் தான் இன்று
முன்னனியில் திகழ்கின்றன தோழா !
உழைத்து உருக்குலைந்த ஏழையவன்
உருவத்தில் எள்ளளவும் மாற்றமில்லை
ஏழையவன் வாழ்வை மாற்றுவோம் என்போர்
ஏறிவிட்டார் எட்டடுக்கு மாளிகையில்
இதுதான் உலகம் நண்பா ! இதுதான் வாழ்க்கை !
குருடர்கள் உலகத்தில் கண் கொண்டோர் மூடரே
சிந்தையில் ஏற்றிக்கொள்வாய் நண்பா !
பிரிவினையும், இனவாதங்களும் கொடி கட்டும்
பொல்லாத காலமிது புரிந்து கொள்வாய்
மக்களைப் பிரித்திடுவோர் தலைவர்களாய்
மக்கள் மத்தியில் உலாவிடும் வேளையிது
பேதங்களைத் தூண்டி அரசியல் நடத்தும்
பாவிகள் பூமியில் மக்கள் பேதைகளே !
வெள்ளைக் காகித்ததில் உனக்கு மடலாய்
வெறும்பேச்சு வரிகள் தானிவை நண்பா !
உள்ளக்குமுறல்களை உணர்வுகளாய்
உன்னிடம் கொட்டி விட்டேன் கலங்காதே
இரவு விடிவது போல இவ்வுலகம்
ஒருநாள் விழித்துக் கொள்ளும் நிச்சயம்
இளையோர் உலகம் ஒன்று விரைந்து
புதியதோர் உலகம் படைத்துவிடும்
மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்


0 Comments:
Post a Comment
<< Home