Monday, July 31, 2023

நான் பேச நினைப்பதெல்லாம். . . .

நம்பிக்கையின் அடித்தளமின்றி நாம் வாழ்ந்துவிட  முடியாது.ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு நம்பிக்கையின் அடித்தளத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

ஒவ்வொருவருடைய மனங்களிலும் அவர்கள் கொண்டிருக்கும் எண்ணங்களின் வித்தியாசத்தில் தான் இவ்வுலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது.

தீமை செய்பவர்கள் இல்லாவிட்டால் நன்மை செய்பவர்களை அடையாளம் காண முடியாது.அதேபோலத் துன்ப நிகழ்வுகள் இல்லாவிட்டால் இன்ப நிகழ்வின் மகத்துவம் புரியாது.

ஆனால் இந்நம்பிக்கை நியாயம் எனும் எல்லைக்கோட்டைத்  தாண்டும் போதுதான் வாழ்வில் பிரச்சனையே ஆரம்பிக்கிறது. நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக எம்மையறியாமலே வெறியாக மாறத் தொடங்குகிறது.

எல்லை மீறிய இந்நம்பிக்கையே இன்றைய மத, இனப் பூசல்களின் அடிப்படையாக அமைந்து விடுகிறது.இந்நம்பிக்கை அதன் எல்லைக் கோட்டைத் தாண்டாதிருப்பதற்கு அன்பின் அடிப்படையில் அமைந்த புரிதல் அவசியம்.

எம்மைப் போலவே மற்றவர்களும் என்று அவர்களின் நிலையில் இருந்து அவர்களின் நம்பிக்கையின் ஆழத்தைப் புரிந்து கொள்ளத் தொடங்கி விட்டால் பல பிரச்சனைகளின் தீர்வுக்கு வழி பிறக்கிறது.

நாம் நம்பாத ஒரு விடயத்தை மற்றொருவர் நம்புகிறார் என்றால் எமது அவநம்பிக்கைக்கு நியாயம் கற்பித்து அவரை எம் வழிக்குத் திருப்புவதிலேயே எம்மில் பெரும்பான்மையினரின் கவனம் இருக்கிறது..

எமக்குநடக்கும் நிகழ்வுகள்,எம்மீது வைக்கப்படும் விமர்சனங்கள்அனைத்தையும் எம்மீது தொடுக்கப்பட்ட தனிப்பட்ட தாக்குதல்களாகப் பார்ப்பதால் மனதில் ஆத்திர உணர்வு தலை தூக்குகிறது.

ஒரு நிகழ்வு நடந்து முடிந்த அடுத்த கணத்தில் அந்நிகழ்வைப் பற்றிய எமது நோக்கிற்கும் இரண்டு நாள் அவகாசத்தின் பின்னால் அந்நிகழ்வை மீளாய்வு செய்யும்போது எம்முள் இருக்கும் நோக்கிற்கும் பாரிய வேறுபாடு இருக்கும்.

அதனால்தான் அனுபவம் மிகுந்த பெரியோர் எதையும் அவசரப் பட்டு முடிவு செய்யாதீர்கள் என்று சொல்லி வைத்தார்கள்.

இது ஏதோ ஒரு கட்டுரை வரைவதற்காக நான் உங்களோடு பகிர்ந்துகொள்ளும் என்னால் புரிந்துகொள்ளப்படாத ,அனுபவிக்காத ஒரு விடயமல்ல.

என்வாழ்வில் நான் சந்தித்த பலகணங்கள்.என் வாழ்வில்எனக்கு நேர்ந்த என்னால் நிகழ்த்தப்பட்ட  நிகழ்வுகள் இவற்றின் அடிப்படையை நான் அசை போட்டுப் பார்க்கும்போது என்னுள் எழும் அதிர்வுகளையே நான் வரிகளாக்கி இவ்வெழுத்துத் தோட்டத்தில் விதைக்கிறேன்.

அப்படி என்ன இவன் ஏதோ பெரிய ஞானியா?போதிக்கவந்து விட்டானே !என்றுஎண்ணாதீர்கள்.

நான்ஞானியுமல்ல ,ஒரு பெரிய எழுத்தாளனுமல்ல. அனைவராலும் மதிக்கப்படும் சாதனைகள் படைத்த படைப்பாளியுமல்ல. வெறும் சாமானிய மனிதனே !

நான்எழுத்து வடிவில் பகிர்ந்துகொள்பவை ஏதாவது உபயோகமான வகையில் அமைந்திருக்குமானால் அதுவே நான் என்னை இத்தனை காலம் வாழ வைத்துக் கொண்டிருக்கும் அகிலத்திற்கும், இயற்கைக்கும் நான் எழுதுவதைப் படித்து ரசிக்கும் அன்றி நகைக்கும் என் இனிய அன்பு உள்ளங்களுக்கும் காட்டக்கூடிய நன்றியுணர்வு.

ஒரு கவிஞனாக கற்பனைத் தேரில் பறக்க வேண்டி வருவது உண்டு.ஆனால் எதையுமே கற்பனையின் அடித்தளத்தில் எழுத முடியாது.உள்ளத்தில் உலவும் உண்மைகளுக்கும் ஒரு வடிகால் அமைக்க வேண்டியது அவசியமாகிறது.

வாழ்க்கையின் வாலிப வயதினை நாத்திகத்திலும்,பயனற்ற அரசியலைப் பேசுவதிலும் பயன்படுத்திய என்னை ஆத்திகத்தின் பால் திருப்பிய சம்பவங்கள் ஏராளம்.

அனைத்துக் கருத்துக்களையும்,அனைத்து மதங்களின் சாரம்சத்தையும் அறிந்து கொள்வதே உண்மையானஆத்திகம் என்பதே எனது கருத்து.

“தம்பிஉன் உள்ளத்தில் உண்மை இருந்தால் எழுதுகோலை எடு எழுது"என்றார் எம் முப்பெரும் பாவலர் பாரதி.

உண்மையே கடவுள்.உண்மையே சமயம்,உண்மையே மனிதத்துவம்..

நாமும்வாழ்வோம் மற்றவரையும் வாழவிடுவோம் என்று வாழ்வதே வாழ்க்கையின் அடித்தளமாக இருந்தால் பிரச்சனைகள் அனைத்தும் தீர்வதற்கு வழிபிறக்கும்.

அமைதியான, தெளிவான உள்ளம் ஒன்றே அன்பான வாழ்க்கைக்கு வழி வகுக்கும்.எனது இந்த 46 வருட புலம்பெயர் வாழ்க்கையிலே பிரச்சனைகளைக் கண்டு நான் ஓட ஆரம்பித்திருந்தால் எப்போதோ உலகத்தை விட்டே ஓடியிருந்திருக்க வேண்டும்.

பூட்டுகளோடு சாவிகள் தயாரிக்கப்படுவதைப் போல பிரச்சனைகளோடு தீர்வுகளும் வருகின்றன.சில சமயங்களில் அதைக் கண்டு கொள்வதற்கு தாமதமாகி விடுகிறது.

நிகழ்வுகளைக் கோர்த்துப் பார்க்கச் சமயங்களில் நாம் தவறி விடுவதால் வாழ்க்கை எமக்களிக்கும் சமபலன்களை  நாம் கவனிக்கத் தவறி விடுகிறோம்.

ஒரு சிறு உதாரணமாக காலையில் வேலைக்குச் செல்வதற்காக காரில் ஏறி உட்கார்ந்து புறப்பட ஆயத்தமாகும் போதுதான் ஒரு சக்கரத்திற்கு காற்றுப் போயிருப்பதை காண்கிறோம்.மனது எரிச்சலடைகிறது.சரி ஒருவாறு சக்கரத்தை மாற்றிக் கொண்டு ஆபீஸுக்குள் சென்று அமர்கிறோம்.

சிறிது நேரத்தின் பின்னால் மின்னஞ்சலில் சம்பள உயர்வு பற்றிய அறிவித்தல் வருகிறது. சிறிது நேரத்தின் முன்னால் அடைந்த ஒரு எரிசலூட்டும் சம்பவத்தைத் தந்த அதே வாழ்வுதானே இப்போ மகிழ்வையும் தருகிறது என்பதை எண்ணிப்பார்த்து இரண்டு சம்பவங்களையும் கோர்த்துப் பார்க்கத் தவறுவதினாலேயே எம் வாழ்க்கை எமக்கு பல சமயங்களில் எதிர்மறையான தாக்கங்களைத் தருவது போலத் தோன்றுகிறது.

உள்ளத்தின் உணர்வுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளச் சந்தர்ப்பம் தந்த அனைத்துக்கும் மேலான சக்திக்கு என் நன்றிகளையும், இதைப் பொறுமையாகப் படிக்கும் உங்களுக்கு எனது நன்றியறிதலையும் அன்போடு கூறிக் கொள்கிறேன்.

உங்கள் ஆதரவின்றி நானில்லை ஏனெனில் எழுத்தின்றி இந்தச் சக்தி இல்லை.

மீண்டுமொரு பகிர்வுடன் சந்திக்கும் வரை

அன்பன்
சக்தி சக்திதாசன்

Saturday, July 22, 2023

நினைப்பததெல்லாம் பேசிவிட்டால் . . . .

நான் எழுதும் எழுத்துகளின் ஆரம்பம் கவிதை. என்னை யாரென்று எனக்கே அறிமுகப்படுத்தியது கவிதை. என்னுள் இருக்கும் குறைகளை எனக்குச் சுட்டிக்காட்டியது கவிதை. அவைகளை ஏற்றுக்கொள்ளப் பழக்கியது கவிதை. மற்றவர்கள் என்மீது தூக்கிப்போடும் விமர்சனம் எத்தகையானதாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள பழக்கியது பழக்கிக் கொண்டிருப்பது கவிதை.

ஆக மொத்தம் என் வாழ்க்கையே ஒரு கவிதை எனலாம்.

கவிதையையே மூலாதாரமாக வைத்து வாழ்ந்து விடுவது யதார்த்தமான காரியமா ?

நாம் வாழும் இந்தப்பூமியே கவியரங்கமாகவும், அதிலே வாழும் அனைவரும் என்னைப் போலவே கவிதையை நேசிப்பவர்களாக இருந்தால் மட்டுமே அப்படி வாழ்வது சாத்தியமாகும். ஆனால் உண்மையான உலகம் அப்படியில்லையே !

குத்துச்சண்டை போடுபவன் எத்தனை
திறமையானவனாக இருந்தாலும் அவ்ன் முறையாக வெற்றி பெற வேண்டுமானல் குத்துச்சண்டை மேடையில் மற்றுமொரு குத்துச்சண்டை விதிகளை நன்கறிந்த ஒரு வீரனுடன் தான் போராடி வெற்றி பெற முடியும்.

நிஜவாழ்க்கையில் அவனால் அப்படிச் செய்ய முடியாது ஏனெனில் குத்துச்சண்டையை மதிக்கத் தெரியாதவன் ஒரு கத்தியை எடுத்து அவனைக் குத்தி விட்டுச் சென்று விடலாம்.

கவிஞர்கள் சாதாரண உலகில் வாழ்வதும் அப்படித்தான்.

கவிதை தெரிந்தவர்கள் மத்தியில் அதனை ரசிக்கத் தெரிந்தவர்கள் மத்தியில் கவிஞனாக வாழலாம் ஆனால் மற்றவர்கள்
மத்தியில் பைத்தியக்காரன் என்று கூட எண்ணப்படலாம்.

இதற்கு நாம் மகாகவி பாரதியாரையே எடுத்துக் கொள்ளலாமே ! 

இன்று அவரின் பெருமைகளைச் சொல்லி தாம் புகழ் தேடும் சமூகம் அன்று அவரது இறுதிச் சடங்குக்கு வெறும் பதின்மூன்று பேரே பங்கு பற்றினார்கள் எனும் செய்தி நிரூபிக்கிறது.

முகநூல் குழுமங்களை எடுத்துக் கொண்டால் ஒத்த மனக்கருத்துடைய பலர் நண்பர்களாக இணையும் போது கவிஞர்களின் படைப்புகள் ஆதரிக்கப் படுகின்றன. கவிஞர்கள் கெளரவிக்கப் படுகிறார்கள். உண்மை அன்பால் முகமறியா உறவுகள் பல அன்பைப் பொழிகின்றன.

ஆனால் வெளியுலகில் எத்தன இடங்களில் உண்மை அன்பின் விலையாகத் துன்பங்களை வாங்கிய அனுபவங்களுக்கு சொந்தக்காரராய் இருந்திருக்கிறோம்.

 என் மனதில் நீண்டதோர் கேள்வி பலகாலங்களாய் நிலவுகிறது.

நான் ஏன் கவிதைகளில் நாட்டம் கொண்டேன் ? என்பதே அது.

இன்றுவரை அந்தக் கேள்வி என்னைத் துரத்தி வருகிறது. என்னைக் கவிதையின்பால் ஈர்த்தது ஒரு நிகழ்வா ? இல்லை நிகழ்வுகளின் தொகுப்பா ? 

விடையைத் தேடும் படலம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

இடையிடையே மனம் சோர்வடைந்து உனக்கேன் இந்த வீண் தேடல் ? நீ என்ன மாபெரும் கவிஞனோ ? என என் மனம் என்னை நோக்கிக் கேள்விக்கணைகளைத் தொடுக்கும்.

ஏன் மற்றவர்களால்.தலை சிறந்த கவிஞன் என்று கொண்டாடப்படுபவர்கள் மட்டும் தான் கவிஞர்களா ? இல்லை தாம் எழுதும் கவிதைகளில் தம் உணர்வுகள் உயிர் வாழ்கின்றன என்று எண்ணும் அனைவருமே கவிஞர்கள் தான் எனும் விடையும் கூடவே வரும்.

ஒவ்வொருவர் வாழ்விலும் பல நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கும். பல குடும்பச் சிக்கல்கள் இருந்திருக்கும். சிலருக்கு தமது இளம்பிராயத்து நினைவுகள் மகிழ்வானவையாக இருந்திருக்கலாம். சிலருக்கோ அது மறந்து போக வேண்டிய துயரமான நினைவுகளாக இருந்திருக்கும்.

நான் பிறந்தது ஒரு நடுத்தர மத்திய வர்க்க குடும்பத்தில் பிறந்தவன்.

எனது தந்தை மிகவும் பரந்த மனப்பான்மை உடையவர் எதையும் எம்மீது திணிக்க விரும்பாதவர். அன்னை அன்பே உருவானவர்.

எனது கவிதையுணர்வுகள் அவர்களிடமிருந்து பிறக்கவில்லை.

அப்படியானால் எங்கேயிருந்து இந்தக் கவிதையுணர்வுகள் எங்கிருந்து ஆரம்பித்தன ?

இன்னமும் நான் என்னுள் தேடிக் கொண்டிருக்கும் விடையில்லா வினா இது.

என்ன இவன் இந்தக் கேள்விக்கு விடை காணத் துடியாய்த் துடிக்கிறானே ! அப்படி இதில் என்னதான் இருக்கிறது என்று எண்ணுகிறீர்களா ?

இந்தக் கேள்விக்கு விடையைக் கண்டு விட்டால் அது என்னை நானே அறிந்து கொண்டதிற்குச் சமனாகும்.

என்னுள்ளே துடித்துக் கொண்டிருக்கும் பல உணர்வுகளுக்கு விடை கிடைத்து விடும்.

இது ஒரு பூட்டு . இந்தப் பூட்டின் சாவி மட்டும் எமது கைக்கு வந்து விட்டால் . . . . .

அது கைக்கு வராமல் வைத்திருப்பதுதான் அனைவர்க்கும் மேலானவனின் லீலையோ ?

எனது குழந்தைப் பருவ நினைவுகளை மீட்டிப் பார்க்கிறேன். நினைவுகளில் மன வடிதட்டில் சிக்கி நிற்கும் எண்ணத்துளிகளை புரட்டிப் பார்க்கிறேன்.

கவிதைகளின்பால் நான் ஈர்க்கப்படுவதற்கு முன்னால் நான் தமிழின் மேல் காதல் கொண்டு விட்டேன் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

காதலாகிப் போனேன்
தமிழின் மேல்
காந்தம் இரும்பைக்
கவர்வது போல
நீச்சலடித்தேன் தமிழ்க்கடலில்
நினைவு தெரிந்த நாள் முதலாய்

அப்போது ஈழத்தில் ஒரு அமைதியான சூழல் என்றுதான் சொல்ல வேண்டும்.எனக்கு ஆறு அல்லது ஏழு வயதிருக்கும் எனது தந்தையுடன் தெருவால் நடந்து போகும் போது ஒரு அரசியல் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.

ஒலிப்பெருக்கியில் தமிழரசுக்கட்சித் தலைவர்களில் ஒருவரான வன்னியசிங்கம் என்பவரது பேச்சு ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.

அவரது கணீரென்ற தமிழ்ப்பேச்சு என்னைத் தடுத்து நிறுத்தியது.

எவ்வளவு நேரம் அப்படியே நின்றேன் என்று தெரியவில்லை தந்தை என் கைகளைப் பற்றியதும் தான் நினைவுலகிற்குத் திரும்பினேன்.

அச்சம்பவம் இப்போதும் என் மனதில் அப்படியே பதிந்துள்ளது. பின்னாளில் அதை என்தந்தையும் குறிப்பிட்டுச் சொன்னதுண்டு.

தமிழின் இனிமை. அதனை உபயோகிப்பவர்கள் அதனைத் தமது வீச்சுக்கு ஏற்ப உபயோகிக்கக்கூடிய தன்மை. தமிழ்மொழியில் இருந்த கனிவு . மொழியில் இருந்த ஆளுமை அப்படியே என்னைத் தன்னுள் அமுக்கிக் கொண்டது.

நான் அன்றிலிருந்து இன்றுவரை ஒரு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் ரசிகன். அவரை அரசியல்ரீதியாக, சினிமாரீதியாக விமர்சிப்பவர்கள் பலருண்டு.

இவை இரண்டுக்கும் அப்பாற்பட்ட வகையில் நான் கவரப்படடது அவரது சினிமாக்களில் அவரால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களேயாகும்.

அக்கருத்துகள் அவரை பின்பற்றும் சிலரின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துமானால் அதைவிட நல்ல விடயம் எதுவும் இருக்க முடியுமா?

சமூகம், வர்க்கபேதம் , ஏழை உலகம் என்பன என்னைக் கவிதையின் பால் திருப்பியதோ?

சிறுவயதிலிருந்தே பாடல் வரிகளில் நான் மனதைப் பறிகொடுப்பது வழக்கம்.

அப்படியான வகையில் தத்துவப் பாடல்களில் இருந்து வாலிப வயதில் காதல் பாடல் வரிகளென்று கவியரசர் கண்ணதாசன் பாடல் வரிகளிலும் தமிழில் அவர் கொண்ட ஆளுமையிலும் மனதை மயங்க விட்டவன் நான்.

அப்போதுதான் எனக்கு கவியரசர் கண்ணதாசனின் தமிழாற்றல்.

அவர் தமிழின் இனிமையை எனக்குள் மெதுவாக ஊட்டினார் என்றேதாந் சொல்ல வேண்டும்.

தமிழன்னையின் அழகை, அபூர்வ இனிமையை அவர் கையாண்ட விதம் என்னைக் கிறங்க வைத்தது.

வாலிபப்பருவத்தில் அந்த வயதுக்குரிய காதலுணர்வுகள் என் நெஞ்சமெனும் வீணையை மீட்டத் தொடங்கியதும் தான் கைவிரல்கள் கவிதைகளைல் கிறுக்கத் தொடங்கின.

காதலெனும் உணர்வு மேகம் இதயம் எனும் மலை முகட்டை உரசும்போது பிறக்கும் ஊற்றாகவே கவியுணர்வு முகிழ்த்தது போலும்.

தேடல் தொடர்கிறது. பாடல் பிறக்கிறது, கவிதை சுரக்கிறது.

தென்னை இளநீருக்குள்ளே
தேங்கியுள்ளே ஓட்டுக்குள்ளே
தேங்காயைப் போலிருப்பான்
ஒருவன்
அவனைத் தெரிந்து கொண்டால்
அவன் தான் இறைவன்

என்ற வரிகளைத் தந்தார் என் கவித்தலைவர்.

அப்படித்தான் எம் கவியுணர்வுகளும் மறைந்திருக்கின்றனவோ ? அதைப் புரிந்து கொள்ளும்போது நான் காற்றோடு கலந்து விட்டால் அவை என் கல்லறை வாசகங்களாகட்டுமே !

அன்புடன்
சக்தி சக்திதாசன்
லண்டன்
21.07.2023

Thursday, July 20, 2023

நான் பேச் நினைப்பததெல்லாம்

செய்ய முடிந்தவைக்காகச் செயற்படுஙகள்
====≠==================================
உலகில் பெரும்பான்மையாக சராசரி ஆசைகளை மனதில் தேக்கி வைத்து அதன்பால் எழும் சராசரி கனவுகளுக்குள் தம்மைப் புதைத்து வாழ்வோரே எம்மில் பலராக இருக்கிறோம். 

எம் கனவுகளின் அடிப்படையில் எமது வாழ்க்கையின் லட்சியங்கள் எனச் சிலவற்றை வரையறுத்துக் கொண்டு அவற்றை அடைய எம்மாலான முயற்சிகளை எடுத்துக் கொள்கிறோம். 

இதுவே உலகில் ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கைப் பயணமாகிறது. 

எம்முடைய வாழ்க்கை வெற்றியானதொன்று என்றோ அன்றி விரக்தியான தோல்வியுற்றதொன்று என்றோ வகையறுத்துக் கொள்வது அவரவர் மனங்களைப் பொறுத்தே அமைந்துள்ளது. 

ஆசைகள் எவ்வளவோ இருக்கலாம் ஆனால் அவற்றில் எம்மால் அடையக்கூடியது எவ்வளவு. எமது இலட்சியம் என்னும் எல்லைக் கோட்டை மட்டும் தான் வரித்துக் கொள்கிறோம் ஆனால் அவற்றை நோக்கிப் பயணிக்கக்கூடிய சக்தியும் மனோதிடமும் எமக்கிருக்கிறதா? என்று எண்ணிப்பார்க்கத் தவறி விடுகிறோம். 

விளைவாக மனதில் விரக்தி குடி கொள்கிறது. வாழ்க்கை கசந்து விடுகிறது. எதற்கெடுத்தாலும் எரிந்து விழுகின்றோம். மற்றவர்களுடன் புன்னகை ததும்பப் பேசும் வல்லமையை இழந்து விடுகிறோம். 

ஆமாம் அதனால் தான் செய்ய முடிந்தவைக்காகச் செயற்படு என்கிறார்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை காண்பது எப்படி என்று பயிற்றுவிக்கும் நிபுணர்கள். 

எமது இலட்சியங்கள் மட்டுமல்ல எந்தவொரு செயற்பாட்டை செய்ய முற்படும் போதும் செய்யக்கூடியவற்றிற்காகச் செயற்படும்போது நாம் செலவிடும் நேரம் பயனுள்ளதாகிறது. 

இத்தகையவகையில் ஆராயத் தலைப்படும்போது நாம் ஒரு புதுவகையான மனப்பான்மையை எமதாக்கிக் கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. 

அது என்ன என்கிறீர்களா? 

நாம் எமது திறமைகளின் எல்லைக்கோட்டை நிர்ணயிக்கக்கூடிய தன்மையை அடைகிறோம். ஒரு செயலைச் செய்ய முற்படும்போது இது நம்மால் செய்யக்கூடியதுதானா? என்று எண்ணத் தலைப்படும் போது எம்மையறியாமலே எமது செயற்பாடுகளின் எல்லைக் கோடு எமக்குப் புரிகிறது. 

அதேநேரம் எமக்குத் தெரிந்தவர்களில் அதைச்செய்யக்கூடிய இன்னுமொருவர் இருப்பாரானால் அவரது திறமையை நாம் மதிக்கும் தன்மையை அடைந்து விடுகிறோம். 

மற்றவர்கள் சில செயல்களில் எம்மை விடத் திறமைசாலிகள் என்பதை ஏற்றுக்கொள்வது எம்மைக் குறைத்துக் கொள்வதாக ஆகாது என்னும் உண்மை எமக்குப் புரிகிறது. 

எனது இளமைக்காலத்தில் வீண் விதண்டாவாதமாக என்னால் செய்ய முடியாதவற்றைச் செய்யத்தலைப்பட்டு நேரத்தை வீணாக்கிய அனுபவங்கள் பல இருப்பதனால்தான் இது எனக்கு இப்போது நன்றாகப் புரிகிறது. 

சுயகவுரவத்திற்கும், தற்பெருமைக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து கொள்ள முடியாததினால் பாராட்டப்பட வேண்டிய பலருக்கு அப்பாராட்டைத் தகுந்த நேரத்திலே செய்ய முடியாமல் போன சம்பவங்கள் பல என் மனதில் இன்றும் நிழலாடுகின்றன. 

திறமைகளுக்கான சாவி திறந்த மனங்களிலேதான் துல்லியமாகத் தெரியும் என்னும் உண்மை புரியாமல் முக்கியமான காலம் பல விரயமாகி இருக்கின்றன. 

எம்மைவிட அடுத்தொருவருக்கு இருக்கும் சில செயல்களைத் திறமையாக முடித்துவிடும் செயற்திறனை அறிந்து அவரிடம் உதவி கேட்டு நாம் செய்யும் செயல்களினால் எமது அறிவு விஸ்தீரணமாகிறது. 

எல்லோராலும் வாழ்க்கையில் எலலவற்றையும் அடைந்து விட முடியாது. இந்த யதார்த்தத்தின் அடிப்படையில் நாம் வரித்துக் கொள்ளும் எல்லைக்கோடுகள் எமது செயற்திறனுக்குள் அடங்கியதாக இருந்தால் அதற்காக நாம் செலவிடும் திறனும், நேரமும் மிகவும் பயனுள்ளதாகவும், மனதுக்குத் திருப்தி அளிப்பதாகவும் இருக்கும். 

ஆக மொத்தம் "செய்ய முடிந்தவைக்காகச் செயற்படு" என்னும் வாக்கியத்தின் உண்மைப்பொருளை உணர்ந்து நடந்தால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம். 

அன்புடன் 
சக்தி சக்திதாசன்
லண்டன்
20.07.2023

Saturday, July 15, 2023

நான் பேச நினைப்பதெல்லாம்

எப்போ பிறந்தோம் என்பது எத்துணை தெளிவாக இருக்கிறதோ, அத்துணை குழப்பமாக இருக்கிறது எமது வாழ்க்கையின் முடிவு. 

அப்படிப்பட்ட இந்த நிலையற்ற வாழ்க்கையை வெற்றிகரமாக வாழ்ந்து முடிப்பது எவ்வாறு? 

இதற்கு நாம் ஒவ்வொருவரும் எமது நெஞ்சங்களில் ஒரு வரைமுறை வைத்திருக்கிறோம். ஆனால் எப்படியும் வாழ்ந்து விடலாம் என்ற எண்ணம் கொண்டவர்களும் எம் மத்தியில் இல்லாமல் இல்லை. 

வாழ்க்கையின் வெற்றி என்பதற்கு என் மனதில் எழும் எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுவது என் மனதுக்கு இனிக்கிறது. எண்ணங்கள் எழுத்துக்களாக காகிதத்தை நிறைக்கும் போது மனம் ஏனோ கொஞ்சம் இலேசாகிறது. 

ஒருவர் தனது வாழ்க்கையை முழுவதுமாக வெற்றிகரமாக வாழ்ந்து முடித்து விட்டார் என்பதை எதை வைத்து அளவிடுவது ? ஏனெனில் ஒருவரின் நிலை வாழ்வில் மற்றையவரின் நிலையைப் போலிராது. 

பணத்திலே குளிக்கும் ஒருவர் வாழும் அதே நிலத்தில் கண்ணீரில் குளிக்கும் மற்றொருவர் இருப்பார். உணவுகளை அள்ளியெறிந்து விளையாடும் அதே சூழலில் குப்பைத்தொட்டியில் விழும் ஒரு ரொட்டித்துண்டுக்காக தெருநாய்களோடு சண்டையிடும் அதிர்ஷ்டமில்லாதோர் பலர் இருப்பார். 

இதுதான் வாழ்க்கையின் யதார்த்தம். இத்தகைய நிலையிலே அனைவராலும் வெற்றிகரமாக வாழ்ந்து விட முடியுமா? அங்கேதான் முடியும் என்கிறது ஒருகோணக் கருத்து. 

எப்படி ? 

வாழும் வரை நன்மை செய்துவிடு அதுவே நீ வாழ்ந்த வாழ்க்கை வெற்றிகரமானது என்பதை நிர்ணயித்துவிடும் என்பதே அக்கருத்தாகும். 

இங்கே பல கேள்விகள் துள்ளி விழுகிறது. தேவைக்கதிகமான செல்வத்தையுடைய ஒருவர் நன்மை செய்கிறோம் என்று எதை எதையோ அடுக்கடுக்காகச் செய்யலாம் ஆனால் அடுத்த நேர உணவுக்கே அல்லாடும் ஒருவனால் நன்மை என்று எதைப் பெரிதாகச் சாதித்து விடமுடியும் என்னும் ஒரு கேள்வி எழுவது இயற்கையே. 

நன்மை என்னும் சொல்லின் அர்த்தங்களை மிகவும் ஆழமாக அலசிப்பார்க்க வேண்டும். நன்மை என்பது வெறுமனே மற்றொருவருக்கு பணத்தின் மூலமோ அன்றி வேறு பொருட்களின் மூலமோ செய்யும் உதவி என்னும் கருத்தே பலரின் மனங்களில் மேலோங்கியிருக்கும். 

இல்லை, நன்மை என்னும் சொல் பல வடிவம் எடுக்கிறது. மற்றொருவருக்கு மனதால் கூடத் தீங்கு விளைவிக்கும் எண்ணங்களைத் தவிர்த்துக் கொள்ளுவதும் நன்மை என்றே கொள்ளப்பட வேண்டும். 

இது அனைத்து மனிதர்களாலும் செய்யப்படக் கூடியதொன்றே. இதற்கு நம்பிடம் எவ்வளவு செல்வம் இருக்கிறது அன்றி வசதி இருக்கிறது என்று தெரியத் தேவையில்லையே !. 

அப்படியானல் மனிதனின் மனதில் இத்தகைய தூய்மையான எண்ணங்கள் தான் எப்போது நிலை கொண்டிருக்குமா? இது சாத்தியமில்லையே ! எம்மையறியாமல் சிலவேளைகளில் ஆத்திர உணர்வுகளால் உந்தப்படும் போது மற்றையோரின் மீது தீங்கான எண்ணங்கள் ஏற்படுவது சகஜம் தானே ! 

பலரின் மனங்களிலே எழும் கேள்வி என் மனதிலும் எழாமலில்லை. ஆமாம் நானும் அத்தகைய நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன், இன்னும் ஆளாக்கப்படக்கூடும். 

அப்படியாயின் நான் சொன்ன கருத்து "வாழ்க்கை என்பது வாழும்வரை நன்மை செய்வது" என்பது எவ்வகையில் பொருந்தும்? 

மனிதர்கள் எப்போதுமே தூய்மையான எண்ணங்களை மட்டும் மனதில் கொண்டிருந்தார்களேயானால் அவர்கள் தெய்வீக நிஅலையை அடைந்து விட்டார்கள் என்பதுவே பொருள். அதனால் தான் கடவுள் மனிதனின் மனங்களிலேதான் இருக்கிறான் என்பது பொதுப்படையான கருத்தாக விளங்குகிறது. 

மனிதர்கள் என்னும் போது நிச்சயம் சமயங்களில் மனக்கள் நிலைதடுமாறுவது சகஜம், ஆனால் அப்படி நடக்கும் நிலைகளை மீளப்பரிசோதித்து நம்மை நாமே சுயவிமர்சனம் செய்யும் தன்மையை அடைந்து விட்டோமானால் எமது பரீட்சையில் நாம் சித்தியடைந்து விட்டோம் என்பதுவே பொருள். 

அத்தகைய நிலையில் மற்றையோருக்குத் தீங்கிழைக்காமல் வாழ்வது என்னும் லட்சியத்தை அடையும் வேட்கையின் வெற்றியை அண்மித்து விட்டோம் என்றே பொருள் கொள்ள வேண்டும். 

அப்படியான வேட்கையை மனதில் வரித்துக் கொண்டு வாழ முயற்சிப்பவர்கள் அனைவரினது வாழ்க்கையும் வெற்றிகரமான வாழ்க்கை என்பதுவே உண்மையாகும். 

அன்பு நண்பர்களே ! நான் அனைத்தும் கற்றுத்தேர்ந்தவன் என்னும் பாணியில் அறிவுரை கூறவில்லை வாழ்க்கை என்னும் பாடத்தில் பல அத்தியாயங்களையும், வாழ்க்கைப் பயணத்தில் பல அனுபவ மைல்களையும் கடக்க வேண்டியவன். 

வாலிப வனப்பின் மமதையில் வாழ்க்கையின் யதார்த்த உண்மைகளைத் எடை போடத் தவறியதால் பல தவிர்க்கப்பட்டிருக்கக்கூடிய இடர்களை அனுபவித்த அனுபவங்களுக்கூடாக பயணித்து வெளிவந்தவன் நான்.

இன்று 60 பதுகளின் நடுப்பகுதியைத் தாண்டிய நிலையில் கடந்து வந்த பாதையை எந்தக் குற்ற உணர்வோ அன்றி துயரோ இன்றிப் பார்த்து அதன் பகிர்வினால் சிலர் பயனடையக் கூடும் எனும் நம்பிக்கையோடு இப்பதிவினைப் பகிர்கிறேன்.

என் மனதில் அனுபவங்களினால் எழுந்த என் எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதேயன்றி வேறோர் நோக்கமுமில்லை. 

அன்றைய எனது அறிவின் எல்லைக்குட்பட்ட வகையில் நான் செய்தது சரியே !

இன்று காலச் செதுக்கலினால் வடித்தெடுக்கப்பட்ட என் அறிவினெல்லைக்குட்பட்ட வகையில் செய்வதும் சரியே !

எதையாவது தவறென்று நீங்கள் கருதியிருந்தால் அதற்காக மன்னித்துக் கொள்ளுங்கள். 

சக்தி சக்திதாசன்
லண்டன்
15.07.2023




எண்ணங்களாலே பாலம் அமைத்து .....

எண்ணங்களாலே பாலம் அமைத்து .....


உள்ளத்திலுள்ள உணர்ச்சிகள் திவளைகளாக உருண்டு கொண்டிருக்கின்றன. கடந்து போன காலங்கள் கருமையான நிழல்களாக உள்ளத்தின் அடியிலே உறைந்து போயிருக்கின்றன. ஆனால் இடையிடையே மறக்க முடியாத பசுமை நினவுகள் கற்களுக்கு நடுவில் கரையும் கற்கண்டு போல தித்திக்கின்றது.

வரப்போகின்ற எதிர்காலம் தெரியாத ஒரு அடர்ந்த புதருக்குள் மெதுவாக நுழைவது போல ஒரு எண்ணத்தை ஏற்படுத்துகின்றது.

ஆனால் கைகள் மட்டும் எண்ணங்களைத் தாளிலே வரைந்து உள்ளங்களுக்கிடையில் ஒரு பாலத்தை அமைக்கும் முயற்சியில் இடையறாது ஈடுபடுகின்றது.

ஈழத்திலே பிறந்து லண்டனிலே வாழ்ந்து கொண்டிருக்கும் நான் ஈழத்தமிழனா ? இங்கிலாந்து ஈழத்தமிழனா ? இலலை இங்கிலாந்துத் தமிழனா ? என எண்னையே நான் அடையாளம் காண முற்படுகிறேன் என்பதைத் தவிர , நான் யார் என்று எனக்கு நான் வாழும் சமுதாயம் முத்திரை குத்த முற்படும் நிகழ்வைப்பார்க்கும் போது, என்னை எந்தத்தேசத்தவன் என்று முத்திரை குத்திக் கொள்ள முடியும் என்று தெரியவில்லை.

வாழ்க்கையில் வசதிதான் முக்கியம் என்பது ஒரு யதார்த்தமான உண்மை . ஆனால் அந்த வசதி அடையுமட்டும் தான் இலட்சியமாக இருக்க முடியும் . எது எமது நெஞ்சுக்கு ஒரு நிம்மதியைக் கொடுக்கிறதோ அதை அடைந்த பின்னால் , நாம் தேடி ஓடும் வசதி ஒரு செயற்கையானதாகவே தென்படும்.

அந்த நிலைக்கு வந்த பின்னால் எமது எமது முகத்தின் முகவரியை அலசத் தொடங்குகிறோம். நமடைந்த வசதியைத் தேடும் வழியில் எனது முகவரியைத் தொலைத்து விட்டேனோ என்றோர் ஏக்கம் நெஞ்சினிலே நெகிழ்கிறது.

ஈழத்தை விட்டு நான் லண்டன் வந்து முப்பது வருடங்களாகி விட்டது . ஒரு மாணவனாக வந்த நான் இன்ரு ஒரு மருத்துவக் கல்லூரி மாணவனுக்குத் தந்தை . நண்பர்கள் எண்ணக்கூடும் , ஒரு மாணவனுக்குத் தந்தை என்று சொல்லுவதை விட ஏன் மருத்துவக் கல்லூரி மாணவனுக்குத் தந்தை என்று கூறுகிறான் , கொஞ்சம் தலைக்கனம் கொண்டவனோ என்று. இல்லை அதற்கு ஒரு காரணம் உண்டு.

என் தந்தை நான் படித்து ஒரு டாக்டாராக வேண்டும் எனும் ஆசையை மனதிலே புதைத்துக் கொண்டு , படிக்கமால் என் இளம்பிராயத்தை பாழடித்து எனது சந்தர்ப்பங்களை நழுவவிட்டபோது , பரவாயில்லை அதனால் என்ன என்று ஆறுதல் கூறும் போது அவரது இலட்சியக் கனல் தண்னீர் ஊற்றி அணைக்கப்பட்டு , மனதினுள் புகைந்து கொண்டிருந்தது.

இன்று எனது மகன் மருத்துவக் கல்லூரி மாணவன் என்று நான் சொல்லத் தலைப்பட்டதன் காரணம் , என்னுடைய இளம்பிராயத்தின் வீணடிப்புக்களை ஒருமுறை வெளிகொணர்வதற்கேயன்றி வேறில்லை.

காலங்கள் நமக்குக் கொடுக்கும் சோதனைகள் ஏராளம் .நாம் நாமாக நமக்கு ஏற்படுத்திக் கொள்ளும் சோதனைகள் ஏராளம். எமது எதிர்காலத்தை நோக்கி நாம் எடுத்து வைக்கும் அடிகள் சிலசமயங்களில் எம்மயறியாமலே மற்றவரின் உள்ளங்களயும் மிதித்து விடுகிறது. இது அனைவரது வாழ்விலும் நடைபெறும் ஒன்று . அதை எப்போது புரிந்து கொண்டு அழும் உள்ளங்களுக்கு ஆறுதல் கொடுக்க விளைகிறோமோ , அப்போதே எமது மந்தில் மனிதத்துவம் வேரூன்றத் தொடங்குகிறது.

இலண்டனிலே நான் மாணவனாக வாழும் சமயம் எனக்கு எனக்கு உழைக்கத் தெரிந்ததே தவிர பிழைக்கத் தெரியவில்லை. வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளை கற்றுக்கொள்ளத் தெரியவில்லை. அதனைக் கற்றுக் கொண்டவர்கள் என்னைச் சுற்றிக்கொண்டபோது அதனை உணரக்கூடிய வகையில் யதார்த்தம் புரியவில்லை.

லண்டன் கொடுத்த சந்தர்ப்பங்கள் ஆயிரம் , இங்கே உள்ள வசதிகளை உபயோகித்து கற்றவர் சபையினில் தனி இடம் பெறக்கூடிய வசதிகள் ஆயிரம் .அதனை சரியாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் மிகவும் சிலரே. நல்லனவற்றை எடுத்துக் கொண்டு அல்லனவற்றை விட்டு விடு என்பதனை முற்றாகவே அறிந்து கொள்ளாத நிலை.

இந்த வகையான சூழ்நிலைகளினுள் படிப்படியாக வாழ்க்கை கொடுத்த பாடங்களின் மூலம் அனுபவம் எனும் பட்டறையினுள் தட்டி எடுக்கப்பட்ட இரும்பாக வெளியே வந்து வாழ்ந்தாலும் கூட , இன்றுவரை எமது முகங்களில் உள்ள வரிகளைத் தேடவேண்டிய துர்ப்பாக்கியம்.

இந்தநாட்டு மக்களுக்கு இருக்கும் அதே உரிமைகள் எமக்கும் உண்டு . பிரித்தானியப் பிரஜை எனும் கெளரவம் உண்டு , ஆனாலும் ஏன் எம் அடிமனதில் இன்னும் எமது அடிப்படையைத் தேடி ஓர் ஏக்கம்? ஆங்கிலத்தில் சொன்னால் SriLankan by birth , British by choice . இது சரியான விளக்கமா ? நான் யாழ்ப்பாணத்தில் பிறந்து , வளர்ந்தது , வாழ்ந்தது 17 வருடங்கள் தான் , ஆனால் இலண்டனில் வாழ்ந்ததோ முப்பது வருடங்கள் .
கணிதத்தின் படி பார்த்தால் . நான் ஈழத்தவன் என்பதிலும் பார்க்க , பிரித்தானியனாக வாழ்ந்ததுவே கூடிய வருடங்கள் . ஆனாலும் ஏன் இன்னும் இந்தத் தீராத தேடல் ? அந்தப் 17 வருடங்களின் உணர்ச்சிகள் , இந்த 30 வருட உணர்ச்சிகளை விட விலையுயர்ந்தவையா ?


பதினேழு வருடங்களின் அனுபவங்கள் இதயத்தை மென்மையாய் இறகினால் தடவியது போன்றொரு இனிமையான ராகமா ? ஆமாம் அந்தப் பதினெழு வருடங்கள் எனக்கு வாழ்க்கையில் பொறுப்புணர்ச்சியைக் கொடுக்கவில்லை .

அந்தக் காலகட்டம் ஒரு விளையாட்டுப் பருவம் போன்றே விரயமாகியது ஆகவே அந்தக் காலப்பகுதியின் அனுபவங்கள் எல்லாம் மிகவும் இனிமையானது போன்ற ஒரு ஆதங்கம் மனதின் அடிப்பாகத்தில் எப்போதும் உண்டு.

ஆங்கிலத்தில் ஒரு சொல் உண்டு "comfort zone" என்று சொல்வார்கள் அப்படியான ஒரு பாதுகாப்பு வட்டத்தினுள் எனது வாழ்க்கை உருண்ட காரணத்தினால் அந்தப் பகுதி எப்போதுமே இனிமையாக இருக்கிறது. லண்டனில் வாழ்ந்த முப்பது வருட காலமும் வெவ்வேறு பொறுப்பு மிகுந்த காலகட்டத்திற்குள்ளால் வெளிவர வேண்டி இருந்ததினால் , அந்தப் பகுதி ஏனோ கொஞ்சம் கசப்பானதாகவே உள்ளது.

இது யதார்த்தம்.

லண்டனில் பலவருடங்கள் வாழ்ந்த ஒரு தமிழன் எனும் கண்ணாடி வழியாக உலகைப் பார்க்கும் ஒரு அனுபவமாகவே இருக்கிறது . பல கால கட்டங்களில் இங்கிலாந்திலே வேற்று இனத்தவன் எனும் ஓர் எண்ணத்துடன் உரிமை கோரும் வாதங்களை முன் வைத்தாலும் கூட மனதைத் தொட்டு உண்மையாக விளக்கப் போனால் இங்கே கிடைக்கும் இந்த ஜனநாயக உரிமை சொந்த நாட்டில் கிடைப்பது கூடக் கடினமே !

எமது கலாச்சாரங்கள , எமது மதவழிமுறைகளைப் பின்பற்ற சமுதாய அமைப்புக்கள் , அரசாங்கம் கொடுக்கும் ஆதரவு பாராட்டப்படவேண்டியது. "கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்றோர் பழமொழி உண்டு அதனை நடைமுறையில் கடைப்பிடித்துக் கொண்டிருப்பது இங்கிலாந்து வாழ் தமிழ் மக்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

முன்னேற வேண்டும் என்ற இலட்சிய நோக்கம் கொண்ட எவருமே தமது இலட்சியப்பாதையில் நடைபயில கிடைக்கும் சந்தர்ப்பங்கள் , உத்தியோகபூர்வமான உதவிகள் என்பன , நிறம் ,மொழி , மதம் என்பனவற்றிற்கு அப்பாற்பட்டவையாக திரமை அடிப்படியிலும் , தேவைகளின் அடிப்படையிலும் நியாயமான முறையில் கடைப்பிடிக்கப்படுகிறது என்றே சொல்லுவேன்.

நியாயமான முறையில் என்று சொல்லும்போது , மற்றைய நாடுகள் குறிப்பாக எமது தாய்நாடுகளை விட நன்றாக நடைபெறுகிறது என்றே கூறலாம்.

இது நான் வாழும் லண்டன் மாநகரைப் பற்றிப் பெருமை பேசுவதற்காக எழுதப்படுவது அல்ல , எண்ணம் எனும் கல்லெடுத்து அமைக்கும் பாலம் உண்மை எனும் சாந்து பூசப்பட்டு கட்டப்பட்டிருந்தால் தான் அந்தப்பாலம் பயனுள்ளதாக இருக்கும் எனும் காரணமே.

அதற்காக லண்டனில் நிறவேற்றுமை , மற்றும் இனவெறி இல்லை என்று நான் கூறவரவில்லை . எத்தனையோ இடங்களில் நான் அப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு முகம் கொடுக்க வேண்டியவனாயிருந்திருக்கிறேன். ஆனால் சட்டத்தின் பிடியில் அவர்கள் அகப்பட்ட்டார்களேயானால் தப்பிக்க ஒரு வழியுமேயில்லை. இதற்கான சட்டம் மிகவும் இறுக்கமான முறையில் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆனால் சில அரசியல்வாதிகளும் , சில சுயலாபம் தேடும் பிரமுகர்களும் எந்த நாட்டிலுமே வேற்றுமைகளை பூதாகரமாக்குவது இயற்கையே !

இன்றெனக்கு உலகை வாழ்க்கையின் ஏணியில் ஒரு வசதியான படியில் கால்களை வைத்துக் கொண்டு பார்த்து விமர்சிக்க கூடிய நிலையை அந்த இறைவனும் , இந்த நாடும் கொடுத்திருந்தாலும் , காலாச்சார இடைவெளியை , மனதில் ஓடும் தமிழின் தாகத்தைத் தணிக்க , இலக்கிய சாந்திக்காக தமிழ் நாட்டுக்கு ஓடி வரவேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இதுதான் நாம் பிறக்கும்போதே எமது மனதில் எம்மையறியாமல் விழுந்து விட்ட கலாச்சார விதையா ?

அன்புடன்
சக்தி சக்திதாசன்

அம்மா

அம்மா என்றொரு சொல்


அம்மா என்ற சொல்லின் அர்த்தங்களைத் தேடித் தேடி அகராதிகளே அர்த்தமற்றவையாகப் போய்விட்டன.

காலங்கடந்து என் அன்னையை இப்போ எண்ணிப் பார்க்கின்றேன் . அவள் அன்புக் கடலா? ஆண்டவனா? கனிவின் பிறப்பிடமா , கவிதையின் கருவறையா? கருணையின் மறுபிறப்பா ? அர்த்தங்கள் புரியவில்லை ஆனால் அவள் இன்று என்னுடன் இல்லை.

இருக்கும் பொருளன்றை இழந்துவிட்டுத் தேடிப்பார்ப்போம் , கிடைக்காது , ஏமாற்றத்தின் விளிம்புக்குத் தள்ளப்படுகிறோம். சிறிது நேரத்திலேயே மனதைத் தேற்றிக் கொள்கின்றோம் , போனால் போகட்டும் இன்னொன்றை வாங்கி விட்டால் போகிறது . ஜயகோ , அம்மாவை இழந்து விட்டால் எந்த உலகின் எந்த மூலையில் போய் அதற்கு ஒப்பானதாய் ஒரு பெரும் பொருளை வாங்குவோம்?

அன்ரைய காலத்திலே வாலிபத்தின் வேகத்தில் அவளின் பெருமை புரியாமல் போன காலங்கள் உண்டு , அந்தக் காலங்கள் என் வாழ்க்கை ஏட்டில் இருந்து நீங்கிவிட இறைவனுக்கு ஓர் ஆணையிடும் சக்தி மட்டும் எனக்கிருந்தால் , கழித்ததைக் கூட்டலாக்கி என் அன்னையுடன் களித்திருப்பேன்.

எத்தனை தடவைகள் நெஞ்சில் எட்டி உதைத்தலும் சிரித்தபடி தாங்கிடும் அந்த அன்னையர்க்கென ஒரு இதயம் அன்பெனும் நீர் பாய்ச்சி அந்த ஆண்டவன் வளர்த்தெடுப்பான் போலும். பொறுமைக்கு வரைவிலக்கணத்தை இந்தப் பூமாதேவி எமது அன்னையரிடம் இருந்துதான் படித்திருப்பாள் போலும்.

தனக்கென ஒன்றும் வேண்டாது , தன்னைத்தானே தேய்க்கும் அந்த சந்தனத்தின் வாசத்தை மட்டும் நுகரும் எமக்கு அதன் வலி புரிவதில்லை.தன் பிள்ளைகளின் மீது ஏதும் கொடுஞ்சொற்கள் விழுந்திடக் கூடதென்பதற்காக தன்னையே ஒரு கேடயமாக்குவாள்.

இல்லை எனுஞ் சொல் இல்லையாம் கர்ண மகராஜா வீட்டிலே , போங்கப்பா! கர்ணனுக்கே கொடையின் கோட்பாடு கற்றுக் கொடுத்தவரே அன்னையர்தாமென்பேன்.

ஒரு கோவிலிலே "எனக்கு நல்ல வாழ்க்கை கொடு , எனது குடும்பத்தை வாழவை "எனும் கோஷங்கள் ப்ர்ரர்த்தனைகளாய் , இறைவனின் காதுகளில் ஒலித்திருக்க , அவன் கவனம் மட்டும் ஒரே ஒரு கோஷத்தில் இருந்ததாம் , அந்தக் கூட்டத்தில் ஒரு மூலையில் ஒரு அன்னை நிற்கிறாள் என்றான் இறைவன். "என் பயனுக்கு வரும் தீயவைகளாஇயெல்லாம் எனை நோக்கித் திசைமாற்ரி விட்டு , எனக்கு பயக்கும் நன்மையனைத்தையும் அவனுக்கே அளித்துவிடு" என்றோர் பிரார்த்தனை என் காதுகளில் ஒலிக்கிறதே அதனால்தான் என்றானாம்.

அன்னையரை மட்டும் போற்றாதீர் , உமக்கென ஒரு பிள்ளையைப் பெற்றுக்கொடுத்து தானும் ஓர் அன்னையான உமது சரிபாதியான மங்கைக்கோர் மரியாதை இந்த அன்னையர் தினத்தினில் செய்யத் தவறிடாதீர்.

பெண்களுக்கோர் தனியிடம் ஏன் என சளைக்காமல் கேள்விகள் கேட்கும் சிலர் உண்டு . புரிந்து கொள்வீர் பெண்மையை மதித்திடும் காரணம் யாதெனில் அன்னையராகும் ஓர் பெருங்குணம் அவர்க்குண்டு. புதுமைப்பெண்ணெனெ அந்த எட்டயப்புரத்துப் பிச்சைக்கவி தன் செல்வத்தமிழால் சீராட்டினானே , அது அன்னயராவோம் அதிலும் புதுமையான அன்னையராவோம் எனும் ஓர் புதுப் பொலிவு கொள்வதற்கே.

அன்னயர் தினத்தைக் கொண்டாடுவோம் !அதுமட்டுமன்றி அன்னையர் அனைவரையும் சமமாய் மதிக்கும் ஒரு கருத்தை முன் வைத்திடுவீர்!

அன்னையருடன் வாழும் புண்ணியம் செய்தோருக்கோர் நட்பான அறிவுரை , இழந்த பின்பு அறியும் பெருமையை இருக்கும்போதே நிலை நாட்டிடுவீர்.

இ - சங்கமம் இதழில் வெளியானது